Saturday, December 31, 2011

துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது:புரட்சித்தலைவிஅம்மா ஜெயலலிதா.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில்புரட்சித்தலைவிஅம்மா ஜெயலலிதா பேசியது:


கடந்த ஆண்டு இதே டிசம்பர் திங்களில் அதிமுகவின் வெற்றிக்கான 'கவுண்ட் டவுன்' தொடங்கிவிட்டது என்று நான் சூளுரைத்ததை இம்மியும் பிசகாது உண்மையாக்கி இருக்கும் தமிழக மக்களுக்கு நன்றி. அயராது பாடுபட்ட என் பாசமுடைய கழக தொண்டர்களான உங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அலைவரிசை கொள்ளை பணத்தையும், அதிகார பலத்தையும், தீயசக்தி கும்பல் திரட்டி வைத்திருந்த வன்முறை கும்பல்களையும் திடத்தோடு எதிர்கொண்டு ஒரு போதும் கழகத்தைக் காட்டிக் கொடுக்காது வெற்றி ஒன்றே நம் இலக்கு என்று பாடுபட வேண்டும்.
கடந்த காலத்தை வென்றிருக்கிறோம். இனி எதிர்காலத்தை எந்நாளும் நம்முடையதாக்க துல்லியமான செயல் திட்டங்களையும், நாம் வகுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு இருக்கிறது. தமிழக மக்கள் நம் மீது வைத்திருக்கின்ற அளவில்லாத அன்பையும், ஆழமான நம்பிக்கையையும் தங்களின் வாக்களிப்பின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்தியாவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக நான் மாற்றுவேன் என்னும் உறுதிமொழியை தங்கள் ஆள்காட்டி விரல் மையால் வரவேற்று ஆமோதித்து இருக்கிறார்கள். அந்த மக்களின் நம்பிக்கையை, அந்த மகத்தான பாசத்தை, எதிர்பார்ப்பை துளியும் குன்றாமல் குறையாமல் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதில் உங்களின் தலையாய பங்களிப்பும், ஒத்துழைப்பும் மிகவும் அவசியம்.


நேர்மை... ஒரு 'சிறு' கதை!
இன்னும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு சிறு கதையை உங்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன். ஒருவன் நேர்மையான அதிகாரி. தன் பணிகளில் கண்ணும் கருத்துமாக செயல்படக் கூடியவன். லஞ்ச லாவண்யங்களில் துளியும் ஈடுபடாதவன். ஒரு நாள் அவனை சிலர் அணுகி தவறான செயலுக்கு தூபமிட்டார்கள். ஒரே ஒரு காரியம் தான். சின்ன தவறு தான். அதை செய்தால் போதும் வாழ்நாளெல்லாம் வளமாக வாழுகிற அளவுக்கு பணம் கிடைக்கும் என்றெல்லாம் மூளைச் சலவை செய்து ஆசை வலை விரித்தார்கள்.
"எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள் யோசித்துச் சொல்கிறேன்'' என்றவன் வீட்டுக்கு வந்தான். விதிமுறைகளை மீறி இதுவரை எதையும் செய்ததில்லை. ஒரே ஒரு முறை தானே? தவறு செய்யலாமா? கூடாதா? இரவெல்லாம் அவனுக்கு தூக்கம் இல்லை. யாரிடம் கேட்பது? தவறு செய்வதற்கு ஆலோசனையை பிறரிடம் கேட்பது அவமானம் இல்லையா? குழம்பியது அவன் மூளை. முடிவெடுக்கவும் முடியாமல் உறக்கமும் கொள்ளாமல் அவன் யோசித்துக் கொண்டே இருக்க பொழுதும் விடிந்தது. காபி எடுத்துக்கொண்டு அவனது தாய் அறைக்குள் வந்தார். இரவெல்லாம் தூங்காததை மகனின் கண்கள் காட்டிக் கொடுத்தன. இதற்கான விடையை அம்மாவிடமே கேட்டுவிடுவோம் என்ற முடிவுக்கு வந்தவாறே அலுவலகத்தில் நடந்த விஷயத்தை அப்படியே விவரித்தான்.
"இதை செய்வது சரியா அம்மா?'' என்று கேட்டான். "வேண்டாமப்பா. எப்போதும் அதிகாலையில் உன்னை எழுப்பி காபி கொடுப்பதற்கு குறைந்தபட்சம் பத்து நிமிடம் ஆகும். நீ அவ்வளவு ஆழ்ந்து தூங்குவாய். ஆனால், இன்றோ இரவெல்லாம் தூங்காமல் உன் கண்கள் இரண்டும் சிவந்து முகம் சோர்வடைந்து இருக்கிறது. தவறான ஒரு காரியத்தை செய்யலாமா என நினைக்கிறபோதே நமக்கு தூக்கம் போய்விடுகிறதே! அதுவே தவறை நாம் செய்துவிட்டால், ஆயுளெல்லாம் நமக்கு தூக்கம் வராதே! நான் அதிகம் படிக்காதவள். உனக்கு புரியும் என்று நினைக்கிறேன்...'' என்று சொல்லிச் சென்றாள் அவனது தாய். அன்று முதல் அவன் முறைகேடான எந்தக் காரியத்தையும் ஏறெடுத்துப் பார்ப்பதையே தவிர்த்தான். அனைவரிடமும் நற்பெயரை ஈட்டினான்.
தன் வாழ்வுக்குத் தேவையான அளவுக்கு செல்வங்கள் தானாகவே அவனிடம் நேர்மையான வழியில் வந்து சேர்ந்தன. இந்தக் கதை போலத் தான் நாம் செய்யும் தவறு, நாம் செய்யும் துரோகம், அது தூக்கத்தை தொலைத்துவிடும். மனச்சாட்சி நம்மை தினம் பிடித்து உலுக்கும். ஆக, அத்தகைய அமைதியைக் கெடுக்கும் எந்தக் காரியங்களிலும் ஈடுபடாமல் நம் பொதுவாழ்வை அமைத்துக் கொண்டோம் என்றால், நாமும் சரி, நாம் சார்ந்திருக்கும் இயக்கமும் சரி இவ்வுலகமே உற்று நோக்கும் அதிசய பீடமாய் உயர்ந்து நிற்கும் என்பது நிச்சயம்.


தேசிய அரசியலில் அதிமுக...
மேலும், அதிமுக தமிழகத்தின் எல்லையைக் கடந்து தேசிய அரசியலிலும் மிகப் பெரும் சாதனைகளை நிகழ்த்துகிற காலம் நம்மை நோக்கி விரைந்து வந்து கொண்டிருக்கிறது.
"அனைத்திந்திய'' என்றே துவங்கும் நம் இயக்கத்தின் பெயருக்கேற்ப தேசிய அரசியலிலும் ஒரு பொற்காலத்தை 1998-லேயே உருவாக்கினோம். அன்று வாஜ்பாயை பிரதமராக்கி பாரதீய ஜனதா கட்சிக்கு முதன் முதலாக இந்த தேசத்தை ஆளுகிற வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்ததில் நம் பங்கு அளவற்றது. நாம் ஒரு அனைத்திந்திய அரசியல் இயக்கம் என்பதை அப்போதே நிரூபித்தோம். இப்போதும் அதனை மேலும் பலப்படுத்தி இந்திய ஆட்சி அதிகாரத்தில் அமரப் போகிற பிரதமரை தீர்மானிக்கிற சக்தியாக நாம் திகழ்வதற்கான தருணம் கனிந்து கொண்டிருக்கிறது. அடுத்து அமையப் போகும் மத்திய அரசில் நாம் இருப்போம். நாமும் இருப்போம் என்பது திண்ணம்.
இன்னும் பல அரசியல் பொற்காலங்களை உருவாக்குகிற பொறுப்பும் அதற்கான உழைப்பும் உங்களிடம் இருக்கிறது. அதனை செவ்வனே செய்து முடித்துவிட்டால் இன்றைக்கு தமிழகத்தின் உரிமைகளுக்காக, நீர் ஆதார வளங்களைப் பாதுகாப்பதற்காக, தற்காப்பதற்காக, கையேந்திப் போராடுகிற, இதுபோன்ற நிலை நமக்கு ஒரு போதும் வராது.


தீர்மானிக்கிற இடத்தில் நாம் இருப்போம். அப்படி இருக்கிற போது தேசத்தின் இறையாண்மை குலையாமலும்; தமிழகத்தின் உரிமைகள், உடமைகள் எதிலும் குன்றிமணி அளவுக்கு இழப்போ, குறைபாடோ ஏற்படாமலும் முடிவெடுக்கும் சூழலை நாம் உருவாக்க முடியும். அந்த நிலை, அந்த அரசியல் பொற்காலம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைக் கடந்து, செங்கோட்டையிலும் கழகத்தின் கொடி பட்டொளி வீசிப்பறக்க வேண்டுமானால் என் அன்பிற்குரிய கழகக் கண்மணிகளும், தொண்டர்களும் அவரவர் பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் ஊழல், சேது சமுத்திர திட்டம் போன்ற கணக்கெழுதும் திட்டங்களாலும் கொள்ளையடித்து வைத்திருக்கும் கோடானு கோடி பணத்தை கொண்டிருக்கும் தீய சக்திகளின் கும்பலை எதிர்கொண்டு போராடுகிற கழக நிர்வாகிகள் எந்த அளவுக்கு பொருளாதார ரீதியாக நீங்கள் போராடுகிறீர்கள் என்பதை நான் அறியாமல் இல்லை.
உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். தேவைகள் அறிந்து எப்படி அதை சரி செய்ய வேண்டுமோ அப்படி சரி செய்கிற சாமர்த்தியம் எனக்கு உண்டு என்பதை நீங்கள் பூரணமாக நம்பலாம். அதேவேளையில், இலை வெளியே தெரியும். பூ வெளியே தெரியும். காய் வெளியே தெரியும். கனி வெளியே தெரியும். கிளை வெளியே தெரியும். மரமும் வெளியே தெரியும். ஆனால் இவை அனைத்தையும் தாங்கிப் பிடித்திருக்கும் வேர் வெளியே தெரியாது. அந்த வேர் தான் கழகத்தைக் கட்டிக் காத்துக் கொண்டிருக்கும் கோடானு கோடித் தொண்டர்கள் என்பதை கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரு லட்சத்திற்கும் மேலான உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் உணர்ந்து செயலாற்ற வேண்டும். எனவே, தொண்டர்களிடம் நம் அதிகாரத்தை மறந்து தோழமை உணர்வோடு பழக வேண்டும். அது போலவே பொதுமக்களிடம் எளிமையோடு நடந்துகொள்ள வேண்டும்.


துரோகிகளுக்கு மன்னிப்பு கிடையாது...
நாம், நமக்கு துரோகம் செய்யாமல், ஒற்றுமையோடு நின்றோமானால், எப்போதும் சொல்வதையே இப்போதும் சொல்கிறேன், எப்படை வரினும் இப்படையே வெல்லும். அரசியல்வாதிகளில் பலவிதம் உண்டு. கட்சிக்காரர்களும் பலவிதம் உண்டு. சிலர் தவறு செய்கிறார்கள். குற்றம் புரிகிறார்கள். அதனால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியை விட்டு நீக்கப்படுகிறார்கள்.
அப்படி நீக்கப்படும்போது ஒரு சிலர் சரி நாம் தவறு செய்துவிட்டோம், ஆகவே இது நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்டனைதான். இனிமேல் நமக்கு அரசியல் வேண்டாம், இருப்பதை வைத்துக்கொண்டு அமைதியாக இருப்போம் என்று சிலர் முடிவெடுப்பார்கள். இன்னும் சிலர், சரி நம்மை இந்த கட்சியை விட்டு நீக்கிவிட்டார்கள், வேறு கட்சியில் போய் சேர்ந்துவிடலாம், தொடர்ந்து அரசியல் நடத்தலாம் என்று முடிவெடுப்பார்கள். அதில் தவறேதுமில்லை.
வாழ்க்கை இருக்கின்றவரை வாழ்ந்தாக வேண்டும். ஒரு கட்சியில் இல்லாவிட்டாலும் இன்னொரு கட்சியில் சேருவதில் தவறில்லை. இந்தக் கட்சியில் இனிமேல் அவர்களுக்கு இடமில்லை என்று நீக்கிய பின்பு, வேறு கட்சியில் அவர்கள் போய் சேருவது தவறு என்று சொல்ல முடியாது. அப்படி முடிவெடுப்பவர்கள் ஒரு சிலர் உண்டு. ஆனால், இன்னும் சிலர் இருக்கிறார்கள்.
தவறு செய்து, துரோகம் புரிந்து கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பும், அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களை விடாப்பிடியாக தொடர்புகொண்டு நாங்கள் மீண்டும் உள்ளே சென்றுவிடுவோம், நாங்கள் மீண்டும் செல்வாக்குடன் இருப்போம், இப்போது எங்களை பகைத்துக் கொண்டால் நாளை நாங்கள் மீண்டும் உள்ளே சென்ற பிறகு உங்களை பழிவாங்கிவிடுவோம், ஆகவே எங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள் என்று சொல்பவர்களும் உண்டு.
அப்படி தலைமை மீது சந்தேகம் வருகின்ற அளவுக்கு பேசும் துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது. அதுமட்டுமல்ல, அத்தகையவர்களுடைய பேச்சைக் கேட்டு நம்பி, அதன்படி செயல்படுகின்ற கட்சிக்காரர்களுக்கும் மன்னிப்பு கிடையாது," என்றார் புரட்சித்தலைவிஅம்மா.

Saturday, December 24, 2011

தலைவர் எம்.ஜி.ஆர் 24-வது நினைவு நாள்

அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர் 
நம்மை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு 
அமரர் ஆகிய நாள் 24.12.1987. 
அவரது 24-வது ஆண்டு நினைவு நாள் 
24.12.11 சனிக்கிழமை 

ஒருமுறை திருச்சிக்கு . எம்.ஜி.ஆர்.  காரில் பயணிக்கிறார். வழியில் ஒரு ரயில்வே கேட். கார் நிற்கிறது. எம்.ஜி.ஆர். வந்த செய்தியறிந்து பக்கத்து வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த மக்கள் பறந்து வருகிறார்கள். 

அத்தனை பேரும் காரைச் சூழ்ந்து கொண்டு பாசத்தைக் கொட்ட… திக்குமுக்காடிப் போகிறார் எம்.ஜி.ஆர். ‘’எல்லாரும் நல்லா இருக்கீங்களா?’’ என்று அன்போடு விசாரிக்கிறார். 

பதிலுக்கு அந்த மக்களோ ‘’மகராசா…நீங்க நல்லா இருந்தாலே போதும், நாங்க நல்லா இருப்போம்’’ என்று அந்த உழைக்கும் மக்கள் கையெடுத்துக் கும்பிட்டுச் சொல்ல…அவர்கள் அத்தனை பேரின் கைகளைப் பற்றிக்கொண்டு நெகிழ்ந்து போகிறார் எம்.ஜி.ஆர்.

கார் நகர்கிறது. சில நிமிடங்கள் மௌனமாக வந்த எம்.ஜி.ஆர். உருகிப்போய் சொன்னார்: ‘’ நான் நல்லா இருந்தாலே தாங்களும் நல்லா இருப்போம்னு சொல்ற இந்த மக்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறேன்!''                         

                          மாபெரும் சபையில் நீ நடந்தால் 
                          உனக்கு மாலைகள் விழவேண்டும்
                          ஒரு மாற்று குறையாத மன்னவன் 
                           இவரென்று போற்றி புகழ வேண்டும்.

Tuesday, September 13, 2011

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்

கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது


காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேறுருவில் 
கண் முன்னே தோணுவது சாத்தியமே
காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும் 
கண்ணுக்கு தோணாத சத்தியமே
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம்


கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது


ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
ருத்திராட்ச பூனைகளாய் வாழுறீங்க
சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
ஏமாத்தி கொண்டாட்டம் போடூறீங்க
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும்தூங்குவதும் இல்லை


கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது


பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்


கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது

Friday, May 20, 2011

செய்தபாவம் தீருதையா திருக்குவளையூராரே!


Tuesday, May 17, 2011

தமிழக சட்டசபை தேர்தல் தீர்ப்பு. மவுன புரட்சி நடந்தது ஏன்?

தமிழக சட்டசபை தேர்தல் தீர்ப்பு எப்படி இருக்கும் என, ஏடுகளும், ஊடகங்களும் கருத்து கணிப்புக்களை வெளியிட்டன. ஆனால், ஓட்டுப்பதிவின் போது வீசிய அமைதிப் புயல், அந்த கணிப்புக்களையெல்லாம் சுருட்டிக் கொண்டு போய்விட்டது.

மக்கள் ஏன் மவுன புரட்சி செய்திருக்கின்றனர்?இரண்டு லோக்சபா தேர்தலிலும், 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும், தி.மு.க, தொடர்ந்து வெற்றி பெற்றது. ஆனால், நடந்து முடிந்த தேர்தலில், தி.மு.க., மிகப் பெரிய அதிர்ச்சியை சந்தித்திருக்கிறது.தி.மு.க.,வில், "தென்மண்டல அமைப்பு' என்ற பிரிவு அறிவிக்கப்பட்டது. அதன் அமைப்பாளராக, கருணாநிதியின் மகன் அழகிரி அறிவிக்கப்பட்டார். உண்மையிலேயே இந்த ஏற்பாட்டை, தி.மு.க., தொண்டர்கள் விரும்பவேயில்லை. ஆனால், தென்மாவட்டங்களில், தி.மு.க., வெற்றி பெறுவதற்கு, அழகிரியின் தலைமை தேவை என்று கூறினர்.தென்மண்டலத்திற்காக, மதுரையில் தனி ராஜாங்கம் நடைபெறுகிறது என்ற தோற்றம் வலுப்பெற்று வந்தது. அதை தடுப்பதற்கோ, கட்டுப்படுத்துவதற்கோ முடியவில்லை; அதன் எதிரொலியை, இந்த தேர்தலில் பார்த்தோம். மதுரை நகரில் மட்டுமல்ல, மாவட்டத்தின், 10 தொகுதிகளிலும், தி.மு.க., தோல்வி கண்டது.

ஒரு காலத்தில், தன் கோட்டையாக இருந்த மதுரை மாநகரை, மீண்டும் அ.தி.மு.க., கைப்பற்றியிருக்கிறது.அதற்கு என்ன காரணம்?தி.மு.க, மீது மக்கள் கொண்ட கோபமா?மதுரை தெற்கு தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில், மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராக அண்ணாதுரை போட்டியிட்டார். அவர் ஒரு சாமான்ய தொண்டர். அவர் வாங்கிய ஓட்டுகள், 83 ஆயிரத்திற்கும் அதிகம். அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டவர், செல்வந்தர் வீட்டு பிள்ளை. அவர் வாங்கிய ஓட்டுக்கள், 38 ஆயிரம் தான். எதற்காக இதை குறிப்பிடுகிறோம் என்றால், மதுரை மக்கள் எந்த அளவிற்கு கோபம் கொண்டிருக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ளவே!

எட்டு மாவட்டங்களை கொண்ட சோழ மண்டலத்தில், அ.தி.மு.க., 26 தொகுதிகளிலும், தே.மு.தி.க., மூன்று தொகுதிகளிலும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. தி.மு.க., ஏழு தொகுதிகளிலும், காங்கிரஸ், பா.ம.க., ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்கின்றன.திருவாரூர் தொகுதியில், கருணாநிதி, 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கரூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தி.மு.க., ஒவ்வொரு தொகுதியில் தான் வெற்றி பெற்றிருக்கிறது. கடுமையான போட்டி என சொல்லப்பட்ட, ஸ்ரீரங்கம் தொகுதியில், ஜெயலலிதா, 40 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

பொதுவாக, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், தி.மு.க., கோட்டையாகவே இருந்து வந்திருக்கின்றன. ஆனாலும், இதுவரை கண்டிராத அளவிற்கு, இந்த தேர்தலில் தான், தி.மு.க., இவ்வளவு பெரிய இழப்பை சந்தித்திருக்கிறது. அந்த அளவிற்கு, மக்கள் பல்வேறு காரணங்களால், அதிருப்திக்கு ஆளாகியிருக்கின்றனர். அந்த கோபத்தை, ஓட்டுச்சாவடிகளில் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

கொங்கு சீமையில், 2006 சட்டசபை தேர்தலிலும், அடுத்து வந்த லோக்சபா தேர்தலிலும், தி.மு.க., பெரிய வெற்றியை பெறவில்லை. அதற்கு, அந்தந்த மாவட்ட கழக தலைமைகள் மீது, மக்களும், கழக தொண்டர்களும் கொண்ட அதிருப்தி தான் காரணம்."தொகுதியில், அமைச்சர்களின் புதல்வர்கள், சிற்றரசர்களாக வலம் வருகின்றனர்' என்ற புகார்கள், அறிவாலயத்தை முற்றுகையிட்டன. நில அபகரிப்பு என்ற புகாரில், ஒரு அமைச்சர் பதவி இழந்தார்; மாவட்ட செயலர் பதவியையும் இழந்தார். ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே, அவர் மீண்டும் மாவட்ட செயலரானார். அதை அந்த மாவட்ட மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

கொங்கு சீமையில், இப்படி ஒரு பக்கம் அமைப்பு ரீதியாக தி.மு.க., பலவீனப்பட்ட நிலையில் இருக்கிறது.அந்த சீமை விவசாயத்தையும், தொழில் வளத்தையும் நம்பி இருக்கிற பூமி. நூறு நாள் வேலை திட்டத்தால், விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என, விவசாயிகள் வெதும்பினர்.இதற்கு கேரளம் ஓரு தீர்வு கண்டது. நூறு நாள் வேலை திட்டத்தையும், விவசாய பணிகளையும் இணைத்தது; நூறு நாள் வேலை திட்டமும் செயல்பட்டது. அதே சமயம், விவசாய பணிகளும் இடையூறு இன்றி நடந்தன. இதற்கு, மத்திய அரசின் அனுமதி தேவை. இங்கே, அனுமதி கேட்டதோடு நிறுத்திக் கொண்டனர்; தொடர் நடவடிக்கைகள் இல்லை.கடுமையான மின்வெட்டு, கொங்கு சீமையில் கொதிகலனாக்கிவிட்டது. அதனால், சில தொழில் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது; தொழிலாளர்கள் வேலை இழக்கும் அவலமும் ஏற்பட்டது. திருப்பூர் சாயப்பட்டரை பிரச்னை தீராத தலைவலி தான்.

இப்படி, பல காரணங்கள், மக்கள் நலத்திட்டங்களின் சிறப்புக்களையே சீர்குலைத்துவிட்டன.வடமாவட்டங்களில், தி.மு.க., நல்ல வெற்றியையே எதிர்பார்த்தது. தி.மு.க., கூட்டணியில், ஒரு பக்கம், பா.ம.க.,வும், இன்னொரு பக்கம் விடுதலை சிறுத்தைகளும் இடம் பெற்றன. கூட்டணியின் பிரதான பங்காளியாக, காங்கிரஸ் கட்சி, காட்சி தந்தது. ஆனால், இந்த கூட்டணி, வெற்றிக்கு உதவவில்லை.

கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., அணியில், பா.ம.க., அங்கம் பெற்றது. அந்த கட்சி போட்டியிட்ட, ஏழு தொகுதிகளிலும், அதை தோற்கடித்தது தி.மு.க., தான். ஆனால், அதே பா.ம.க., சட்டசபை தேர்தலுக்கு, தி.மு.க., அணிக்கு தாவியது. வடமாவட்டங்களில், பா.ம.க.,வின் ஓட்டு வங்கி, அதிகபட்சம் 5 சதவீதம் தான் என்பது மெய்ப்பிக்கப்பட்ட உண்மை. அந்த கட்சிக்கு, எந்த மாவட்டத்திலும், முறையான கட்சி கிளைகளோ, அமைப்புக்களோ இல்லை. அந்த கட்சிக்கு, 30 தொகுதிகளை, தி.மு.க., ஒதுக்கி தந்தது.அதே போல, காங்கிரஸ் கட்சிக்கு, 63 தொகுதிகளை ஒதுக்கி தந்தது. அந்த கட்சி ஒரு, பெருங்காயம் இருந்த "டப்பா!' கோஷ்டி சண்டைகளுக்கு குறைவில்லாத ஒரு இயக்கம் அது.இப்போது, இக்கட்சிகளின் வலிமை என்னவென்று தெரிந்திருக்கிறது. 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

கடந்த, 40 ஆண்டுகளாக, அந்த கட்சி இவ்வளவு அவமானகரமான தோல்வியை சந்தித்ததில்லை. 30 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க., மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. தேர்தலுக்கு தேர்தல் அணி மாறும் பா.ம.க.,விற்கு, மக்கள் இப்போது பாடம் புகட்டியிருக்கின்றனர்.தி.மு.க.,வுக்கு இவ்வளவு பெரிய இழப்பை தேடி தந்தது, காங்கிரஸ் கட்சி தான். அந்த கட்சிக்கு, 60 இடங்களை ஒதுக்க தி.மு.க., முன்வந்தது. ஆனால், டில்லியில் இருந்து முதலில், 61 இடங்கள் என்றனர். அப்போது, தி.மு.க.,வின் உயர்மட்ட குழு கூட்டம் கூடியது. 60 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ் கேட்கிறது. எனவே, தி.மு.க., கூட்டணியில் தொடர அதற்கு விருப்பம் இல்லை என்று அர்த்தம்.ஆகவே, மத்திய அமைச்சரவையில் இருந்து, தி.மு.க., அமைச்சர்கள் விலகுவது என்று, உயர்மட்டக் குழு அறிவித்து, அந்த முடிவை, தி.மு.க., செயல்படுத்தியிருக்க வேண்டும். காங்கிரஸ் உறவை உதறியிருக்க வேண்டும்.

ஆனால், கருணாநிதியின், உறவினர்களான இரண்டு மத்திய அமைச்சர்கள், சோனியாவை சந்தித்தனர்; அதன் பின், காங்கிரஸ் கட்சி கொடுத்த நிர்பந்தத்தை, தி.மு.க., ஏற்றுக் கொண்டது. அதனால், தி.மு.க., டில்லி அரசியலில் சூழ்நிலைக் கைதி என்ற எண்ணம் தான் மக்களுக்கு ஏற்பட்டது. ஈழப் பிரச்னையில், காங்கிரஸ் கட்சி மீது தமிழகம் எந்த அளவிற்கு கோபம் கொண்டிருக்கிறது என்பதை தி.மு.க., கணித்திருக்க வேண்டும். அந்த கோபம் தான், காங்கிரஸ் கட்சியை படுதோல்வியடைய செய்துள்ளது. அதன் பாதிப்பிற்கு, தி.மு.க.,வும் உள்ளானது.

இந்த தேர்தலில், விஜயகாந்தின், தே.மு.தி.க., பெற்ற வெற்றியை குறிப்பிட்டாக வேண்டும். இதற்கு முன் நடந்த தேர்தல்களில் தனித்து போட்டியிட்ட அந்த கட்சி, இம்முறை, அ.தி.மு.க., அணியில் நின்று போட்டியிட்டது. அ.தி.மு.க., வெற்றிக்கு அவர்கள் பேருதவியாக இருந்தனர். 41 இடங்களில் போட்டியிட்ட, தே.மு.தி.க., 27 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த கட்சியே, எதிர்க்கட்சி என்ற வரிசையில் அமருகிறது.பொதுவாக, இந்த தேர்தல் தீர்ப்பு குறித்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் என்ன கருத்து சொல்லியிருக்கின்றனர்? "ஒரு குடும்ப ஆட்சிக்கு, மக்கள் முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர்' என்கின்றனர்.

சோலை - அரசியல் விமர்சகர்

Saturday, May 14, 2011

அஇஅதிமுக கூட்டணியின் அமோக வெற்றி


அ இ அ தி மு க.பொதுசெயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக கூட்டணியின் அமோக வெற்றி என்று கூறுவதைவிட, திமுக தலைமையிலான கூட்டணிக்கு எதிராக எழுந்த மக்களின் மௌனப் புரட்சி என்று கூறுவதுதான் மிகச் சரியாக இருக்கும்.

இந்த தேர்தலில் தமிழனின் தன்மானம் காப்பாற்ற பட்டருக்கிறது. தலை குனிந்திருந்த தமிழக தமிழன் தலை நிமிர்ந்து விட்டான். 

அப்படியே உலக தமிழனும் தலை நிமிர நாம் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.தமிழக தமிழன் மட்டும் தமிழன் அல்ல,உலகில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் தமிழர்கள்தான். 

நாளை உலகை ஆள வேண்டும் தமிழர்களே என்ற எம்.ஜி.ஆரின் கனவு நிறைவேறும்.

 அதிமுக கூட்டணி, இந்த தேர்தலில் அமோக வெற்றி பெறும் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் 31 தொகுதிகளை , திமுக கூட்டணிக்கு தர்மம் செய்து விட்டு, 203 தொகுதிகளை அள்ளும் என்று  நினைத்து பார்த்திருக்க முடியாது.

புரட்சி தலைவிக்கு, இது கோஹினூர் வைரம் பொறித்த மணிமகுடம். மீண்டும் ஒரு பிரெஞ்சு புரட்சி வந்து விட்டதோ, என எண்ணும் வண்ணம் ஒரு யுக புரட்சி நடந்திருக்கிறது. 
 
தமிழன் மீண்டும் உலகிற்கு தான் எப்படிபட்டவன் என்பதை உணர்த்தி இருக்கிறான் ,தமிழக அம்பானிகளாக வலம் வந்த ஒரு குடும்ப ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைத்து இருக்கிறார்கள்.
 
பணத்திற்கும்,இலவசத்திற்கும் தமிழன் ஒரு பலிகடா என்று நினைத்த அரசியல்வாதிகளுக்கு இது ஒரு மரண அடி... 

உலகம் முழுவதும் இன்று தமிழன் தலை நிமிர்ந்து கம்பிரமாக மிடுக்குடன் நிற்கிறான்.

பணத்தையும், இலவசங்களையும் அள்ளி இறைத்தால் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் கருணாநிதி செய்த துரோகங்களுக்கும், அநியாயங்களுக்கும், மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர்... 

இவர் செய்த பாவங்களின் பலனை இனிவரும்காலங்களில் அனுபவிப்பார்... ஈழத்தில் தமிழர்களை  கொன்று குவிக்கப்பட்ட போது வேடிக்கை பார்த்த கருணாநிதி அதற்கான பலனை அனுபவித்தே ஆகவேண்டும்.


பணத்தின் மூலம் ஜெயித்து விடலாம் என்ற தி.மு.க. வின் நினைப்பை முளையிலேயே கிள்ளி எறிந்த தமிழ் மக்களின் பொற்பாதங்களை வணங்குகிறேன்.

இந்த தேர்தலின் மூலம் தமிழ் மக்கள் அகில இந்தியாவுக்கே பாடம் கற்பித்திருக்கிறார்கள்.இதற்கு காரணமான மக்களின் அறிவாற்றலை, என்ன சொல்லி பாராட்டுவது.



Thursday, April 28, 2011

போர்க்குற்றம் புரிந்த ராஜபக்சே குழுவினருக்கு இந்தியா தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

 
சென்னை: ஐ.நா. குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலையை நிகழ்த்தியதற்காக ராஜபக்சே அவருடைய ராணுவத் தளபதிகள், மூத்த அமைச்சர்கள் மற்றும் இதில் தொடர்புள்ள இதர நபர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்காக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை இந்தியா வலியுறுத்த வேண்டும். தேவைப்படின் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை அரசின் பொறுப்புடைமை குறித்த ஐக்கிய நாடுகள் சபை வல்லுநர்கள் குழுவின் அறிக்கை இறுதியாக வெளியிடப்பட்டுள்ளது. “அப்பாவி மக்களுக்கு சேதமின்மை” என்ற கொள்கையின் அடிப்படையில் “மனிதாபிமான மீட்புப் பணி” நடத்தப்பட்டதாக தெரிவிக்கும் இலங்கை அரசின் வாதத்தினை 214 பக்கங்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை தவிடுபொடி ஆக்கியுள்ளது.

இந்தோனேஷியாவைச் சேர்ந்த மார்சுகி டாருஸ்மேன், அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் ராட்னர், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த யாஸ்மின் சூகா ஆகியோர் அடங்கிய மூன்று நபர் குழு 16.9.2010 அன்று தனது பணியை தொடங்கியது.

இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போரின் உச்சகட்ட பகுதியான செப்டம்பர் 2008 முதல் மே 2009 வரையிலான காலத்தையும், அப்போது பல்வேறு திசைகளில் இருந்து வந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கிக் கொண்ட பெரும்பாலான அப்பாவி தமிழர்களின் நிலைமையையும் இந்தக் குழு தன்னுடைய ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக் கொண்டது.

குண்டு மழை பொழிவிலிருந்து தமிழர்கள் தங்களை காத்துக் கொள்வதற்காக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட “குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பகுதி” மற்றும் மருத்துவமனைகள் ஆகியவற்றின் மீதே இலங்கை அரசின் ராணுவ படைகள் குண்டு மழை பொழிந்ததை நம்பிக்கையூட்டும் ஆதாரங்களுடன் மூன்று நபர் வல்லுநர் குழு கண்டறிந்துள்ளது. மிகப் பெரிய ஆயுதங்களையும், வெடி மருந்துகளையும் பயன்படுத்த மாட்டோம் என்று இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தாலும், அப்பாவி தமிழ் மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் திட்டமிட்டு குண்டு மழை பொழிந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் இறப்பதற்கு காரணமாக இலங்கை ராணுவம் இருந்தது என்று வல்லுநர் குழு முடிவு செய்துள்ளது.

மிகப் பெரிய பீரங்கிகளையும், குண்டுகளையும் பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல், மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் மக்களை சென்றடையா வண்ணம் வட இலங்கையில் உள்ள வன்னி பகுதியைச் சுற்றி மிகப் பெரிய தடையை இலங்கை அரசும் அதன் படைகளும் உருவாக்கின.

மயக்க மருந்து அல்லது வலியை இழக்கச் செய்யும் மாத்திரைகள் எதுவும் இல்லாமல், மருத்துவ காரணங்களுக்காக தேக உறுப்புகளை வெட்டி எடுக்கும் மருத்துவ மனைகள் மீதும்; மருத்துவ மனைகள் மீது குண்டுகள் வீசப்பட்டதால் மரங்களுக்கு கீழ் அறுவை சிகிச்சை நடத்தப்பட்ட பகுதிகளிலும் குறி வைத்து இலங்கை ராணுவம் குண்டு மழை பொழிந்துள்ளது.

உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக நூற்றுக்கணக்கானவர்கள் மரணமடைந்துள்ளனர். உணவுப் பொருட்கள், தண்ணீர் மற்றும் மருந்துப் பொருட்கள் போர்ப் பகுதிக்கு சென்றடையக் கூடாது என்பதற்காகவே, போர்ப் பகுதியில் சிக்கிக் கொண்ட அப்பாவி தமிழ் மக்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே இலங்கை அரசு குறைத்து மதிப்பீடு செய்ததாக இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அப்பாவி தமிழர்களை கேடயமாக பயன்படுத்துதல், குழந்தைகளை கட்டாயப்படுத்தி படையில் சேர்த்தல், தன்னுடைய கட்டுப்பாட்டிலிருந்து தப்ப நினைக்கும் அப்பாவி தமிழர்களை கொல்லுதல் மற்றும் கூலி வேலை செய்யுமாறு கட்டயாயப்படுத்துதல் உட்பட பல மனித உரிமை மீறல்களை எல்டிடிஇ நிகழ்த்தியுள்ளதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், போர் நடந்த கடைசி மாதங்களில், எல்டிடிஇ மிகவும் குன்றிய நிலையில் இருந்ததாகவும், எனவே, எல்டிடிஇயின் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி, தன்னுடைய சொந்தக் குடிமக்களான தமிழ் மக்கள் மீது விபரீத அளவு தாக்குதல் நடத்தியதை இலங்கை அரசு நியாயப்படுத்த முடியாது என்றும், இது இனப் படுகொலை தான் என்றும், நாகரிகம் மற்றும் பண்பாடுள்ள மக்கள் இதை இனப் படுகொலை என்று கருத்தில் கொள்வது தான் பொருத்தமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை வெளி வராமல் இருப்பதற்கு தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் இலங்கை அரசு மேற்கொண்டது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை வெளியிடப்பட்டால், தற்போது இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமரச முயற்சிகளுக்கு தடையாக அமைந்துவிடும் என்ற வாதத்தை இலங்கை அதிபர் ராஜபக்சே முன்வைத்தார்.

ஐ.நா. அறிக்கையை வெளியிடாமல் தடுப்பதற்காக ராஜபட்சவின் சகோதரர் கோத்தபயா ராஜபக்சே அமெரிக்காவிற்கு சென்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஐ.நா. அறிக்கை வெளியிடப்படாமல் இருக்க தன்னால் இயன்ற உதவியை செய்யுமாறு ராஜபக்சே பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தொலைபேசி மூலம் பேசியதை இலங்கை அரசு உறுதி செய்ததாக ஊடகங்களிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தனை நிர்ப்பந்தங்களுக்கு மத்தியில் ஐ.நா. குழுவின் அறிக்கை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினையில் இனிமேலும் இந்தியா மவுன பார்வையாளராக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது. மொழி, மதம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் ஒற்றுமையுடன் திகழும் இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் இடையே தொப்புள் கொடி உறவு உள்ளது.

தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, கடலுக்கு அப்பால் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நமது சகோதர, சகோதரிகள் தங்களது சொந்த நாட்டிலேயே ஆற்றொணா துயரத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பது தாங்க முடியாத வேதனையை அளிக்கிறது.

இலங்கையில் உள்ள மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்; கண்ணியத்துடன் வாழ அனைவரும் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய இலங்கை அரசை நிர்ப்பந்திக்கும் வகையில், சர்வதேச இயக்கம் ஒன்றை தொடங்க இந்தியா முன்னின்று நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்படின், எதற்கும் அடிபணியாத இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்த வேண்டும்.

இலங்கையில் அடக்குமுறை என்பது யூகத்தின் அடிப்படையில் சொல்லப்படுவது, ஒருதலைபட்சமானது என்ற முந்தைய கூற்றினை தகர்த்தெறிந்து, இலங்கையில் மனித உரிமை மீறல்களும், மிருகத்தனமான அடக்குமுறைகளும் நடைபெற்றதை ஐ.நா. குழு உறுதி செய்துள்ளது.

எனவே, ஐ.நா. குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலையை நிகழ்த்தியதற்காக ராஜபக்சே, அவருடைய ராணுவத் தளபதிகள், மூத்த அமைச்சர்கள் மற்றும் இதில் தொடர்புள்ள இதர நபர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்காக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை இந்தியா வலியுறுத்த வேண்டும்.

இதைச் செய்யாமல், தற்போது போல் தொடர்ந்து இந்தியா மவுனம் சாதிக்குமேயானால், கண்ணியத்துடன் வாழ்வதற்குரிய உரிமை உட்பட இலங்கை தமிழர்களுக்கான அனைத்து உரிமைகளையும் தடுப்பதோடு மட்டுமல்லாமல், இலங்கையில் வாழும் தமிழர்களை தன்னுடைய நாட்டிலேயே அகதிகளாக மாற்றும் ராஜபக்சேவின் கொள்கைக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கிறது என்று தற்போது கூறப்படும் கூற்றிற்கு வலு சேர்ப்பதாக அமைந்துவிடும்.

இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅதிமுக பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

Sunday, April 10, 2011

தமிழகத்தில் மற்றொரு சுதந்திரப் போராட்டம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா


தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் மற்றொரு சுதந்திரப் போராட்டம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா கூறினார்.

ஒரு குடும்ப ஆதிக்கத்திலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என்றும்
தமிழகத்தைக் காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கையுடன் மக்களைச் சந்திக்க வந்துள்ளேன். 

 கருணாநிதி மற்றும் திமுகவைச் சேர்ந்த ஒரு சில தலைவர்கள் தமிழகத்தை சூறையாடி, உலகப் பணக்காரர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளனர். இக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.  

கடும் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, ரெüடிகள் ராஜ்யம், மணல் கொள்ளை, ஊழல், எந்தத் தொழிலையும், எங்கும், யாரும் செய்ய முடியாத வகையில் அக்கிரமம், அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கள்ள லாட்டரி என சமூக அக்கிரமிங்களுக்கிடையே சிக்கித் தவிக்கும் தமிழகத்தை மீட்கப்போவது எப்போது? என நல்லோரின் மனசாட்சி கேட்கிறது. 

 ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் செய்தவர்களுக்குத் தமிழக மக்கள் தண்டனை கொடுக்கப்போவது எப்போது? என நாடே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

எங்கும், எதிலும் ஊழல் என்ற சாம்ராஜ்யத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழிக்க வேண்டியதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது இத் தேர்தல். 

 தமிழகத்தைப் பொருளாதார வளர்ச்சி மிக்க மாநிலமாக மாற்றவும், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு மிக்க மாநிலமாக மாற்றவும் திமுக ஆட்சியால் முடியாது. எங்களால் முடியும். 

 தமிழக மக்களை 1 லட்சம் கோடி கடனாளியாக்கியதுதான் திமுக ஆட்சியின் சாதனை. மக்கள் பணத்தைச் சுரண்டி பணக்காரர்களாக வேண்டும் என்ற பேராசை பிடித்த கும்பலிடமிருந்து தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும்.  

இலவசமாக வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்குவதாக ரூ.2 ஆயிரம் மதிப்பில் தொலைக்காட்சிப் பெட்டியை வழங்கிவிட்டு, ஆண்டுக்கு ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஆயிரம் ரூபாயை கேபிள் கட்டணமாக வசூலித்துவிடுகின்றனர். கருணாநிதியின் சூழ்ச்சி, தந்திரங்கள் நிறைந்த இதுபோன்ற திட்டங்களே கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன.  

வெள்ளைக்காரர்களிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற சுதந்திரப் போராட்டம் நடத்தியதைப் போன்று, கொள்ளைக்காரர்களிடம் இருந்து தமிழகத்தைக் காக்க மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் என்பதே வரும் சட்டப் பேரவைத் தேர்தல். 

மத்தியில் அமைச்சர் பதவியையும், மாநிலத்தில் ஆட்சியையும் வைத்துக் கொண்டு வேறு எங்கும் காணமுடியாத ஊழலைப் புரிந்து அதிசயக்க வைத்துள்ளனர். 

 பிகார், குஜராத், பஞ்சாப் மாநில வளர்ச்சி நிலைகளோடு ஒப்பிடுகையில் தமிழகம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

 முதல்வர் கருணாநிதி தன் குடும்பத்தின் வளர்ச்சிக்காகவே ஆட்சி நடத்தியதே இதற்குக் காரணம்.  கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கும் அளவுக்கு ஊழலில் சாதனை படைத்துள்ள திமுக-வை, 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கச் செய்து தமிழக மக்கள் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும். 

தமிழக மக்களின் உழைப்பை சுரண்டியதற்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.  பணநாயகத்தால், ஜனநாயகத்தை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார் 

கருணாநிதி. தமிழகத்தை தன் குடும்ப வசமாக்க நினைக்கும் கருணாநிதியை, குடும்பத்தோடு அப்புறப்படுத்த வேண்டும்.  

கயவர்களிடமிருந்து தமிழகத்தைக் காப்பாற்ற, மக்கள் வளமான வாழ்வு பெற, தமிழகம் முதன்மை மாநிலமாக மாற அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

 தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில்அ இஅதிமுக பொதுசெயலாளர் ஜெ. ஜெயலலிதா பேசியது:

Friday, April 1, 2011

தி.மு.க தேர்தல் ஜாதகம்





பகுத்தறிவு பகலவனின் வாரிசுகளாகக் கூறிக் கொள்ளும் திமுகவினர் தேர்தல் பயம் காரணமாக பிரச்சார வாகனத்துக்கு தேங்காய் உடைத்து புறப்படுவதும், பரிகார பூசைகள் செய்ய புறப்படுவதும் சகஜமாகி விட்டதால் நாமும் ஒரு ஜோசியரை பிடித்து திமுக வின் தேர்தல் ஜாதகத்தை கணித்து பலன் சொல்லச் சொன்னோம். இனி ஜோதிட மாமணி கொங்கு மண்டல ஜோதிட சக்கரவர்த்தி பெருந்துறை பெருமாள் கூறுவதை அவர் வாயாலேயே கேட்போம்.

எதிர்க் கட்சிகள் பலமான கூட்டணி அமைத்தது திமுகவிற்கு ஜென்மச் சனி ஆரம்பமாகி விட்டதைக் காட்டுகிறது. சுயமரியாதைக் காரர்களான திமுகவினர் டெல்லிக்கு படை எடுத்து கேட்டதைக் கொடுத்து கூட்டணி அமைத்த நிகழ்வு இனிமேல் காங்கிரஸ் கையில் திமுக இல்லை என்றாகி விட்டது. தமிழகத்தில் 63 நாயன்மார்கள் என்று வர்ணிக்கப்பட்ட காங்கிரஸின் பல கோஷ்டி வேட்பாளர்கள் உள்குத்து காரணமாக வெற்றி பெறுவது சந்தேகமே. இந்நிலையில் திமுக ஆட்சி கூட்டணி ஆட்சியாவது அமைக்க வாய்ப்பு இருக்குமா? என்பது சந்தேகமே. இனி திமுக ஜாதகத்தை விரிவாகப் பார்ப்போம்.


முதலில் ஜாதகத்தில் பலமான எதிர்க் கட்சி கூட்டணி காரணத்தால் திமுகவுக்கு ஜென்மச் சனி பிடித்திருக்கிறது என்று கூறினோமே? சனியின் உக்கிரத்தை குருவின் இடத்தில் இருக்கும் வண்ண தொலைக்காட்சிப் பெட்டி வினியோகம் மூலமும், சுக்கிரன் இடத்தில் இருக்கும் இலவச ஒரு ரூபாய் அரிசி வினியோகம் மூலமும் சரி செய்து விடலாம் என்று திமுக நினைக்கிறது. ஆனால் சனி தனது இடத்தில் உள்ள 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டு பிரம்மாஸ்த்திரத்தை ஏவியதால் திமுகவின் அனைத்து அஸத்திரிங்களையும் தவிடு பொடியாக்கி திமுகவை அனைத்தையும் இழந்து நிர்வாண கோலத்தில் இருக்கச் செய்து விட்டது. அதுதான் சனியின் மகத்துவம். மேலும் தேர்தல் கமிஷனர் மூலம் திருமங்கல பட்டுவாடாக்களை செயல் இழக்கும் முயற்சியில் சனி கிரகம் இறங்கியுள்ளது. சனி பகவானை திருநள்ளாறு சென்று வழிபட்டு பரிகார பூஜை செய்தால் எதிர்கால ஸ்பெக்ட்ரம் வழங்குகளிலுருந்து சற்று தப்பிக்கலாம்.


மருத்துவம், கலைஞர் காப்பீடு, போன்ற திட்டங்களை வைத்துள்ள புதன் கிரகத்தால் கரையேறி விடலாம் என்று திமுக நம்பிக்கை வைத்துள்ளது. ஆனால் மற்ற கிரகங்களின் ஆதிக்கத்தில் உள்ள பிரச்சனைகளால் திமுகவின் கனவு ஓட்டை விழுந்த படகின் நிலைமையாகி விட்டது.சூரியனின் வீட்டில் உள்ள சினிமாத் துறையில் குடும்ப ஏக போகம் காரணமாக சினிமாத் தொழில் கிட்டத்தட்ட அழிந்து விட்டது. வல்லான். வகுப்பதே வாய்க்கால் என்ற நிலை சினிமாத் துறையில் ஏற்பட்டு விட்டதால் தமிழகத்தின் முன்னணி நட்சத்திரமான விஜய் படங்களுக்கே தியேட்டர் கிடைக்காத நிலை. சினிமா கதை வசனம் எழுதிய கலைஞரின் அரசியலுக்கு முடிவுரை எழுத சினிமாக்காரர்கள் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


செவ்வாய் வீட்டைப் பார்த்தோமானால் எப்படி இருந்த மந்திரிகள் இப்படி ஆகி விட்டார்களா என ஆச்சரியப்படத் தோன்றும். பத்து வருடத்துக்கு முன் உள்ள சொத்துக் கணக்கும் இப்போதுள்ள சொத்துக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள இடைவெளி. மக்களை முட்டாளாக்கி மந்திரிகள் பொறியியல் கல்லூரிகளைத் தொடங்கி கல்வித் தந்தைகளாகி விட்டார்கள். ஓட்டு போடும்முன் மக்களுக்கு இது ஞாபகம் வராமல் இருக்க வேண்டுமானால் வைட்டமின் ‘ப’ வைத் தரவேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது. மக்கள் பங்களிப்பில்லாமல் வளர்ச்சி இல்லை. வளர்ச்சியின் பயனாக வந்த அமிர்தத்தை சிலர் எடுத்து அருந்த, கஷ்டங்கள் துன்பங்கள் என விஷத்தை எங்களுக்கு அளிப்பதா என மக்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டதால் திமுக கூடாரம் குழப்பமடைந்துள்ளது.


சந்திரன் வீட்டிலிருந்து விலை வாசி உயர்வு திமுகவை மிரட்டிக் கொண்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன் மளிகைப் பொருள்கள் வாங்கி விட்டு 1000 ரூபாய் கொடுத்தால் மீதி ரூ. 200 மளிகைக் கடைக்காரர் கொடுப்பார். ஆனால் திமுக-காங்கிரஸ் பொருளாதார கொள்கை காரணமாக குண்டூசி முதல் அனைத்து சாமான்களும் விலை ஏறி விட்டது. திமுக ஆட்சியில் மளிகை வாங்கி விட்டு ரூ.1000 கொடுத்தால் மேலும் ரூ.300 கேட்கிறார் மளிகைக் கடைக்காரர். மக்கள் சேமிக்கும் நிலை மாறி மக்கள் கடனாளியாக திரியும் நிலை ஏற்பட்டு விட்டது. சாதாரண பொது மக்கள் எப்போது தேர்தல் வரும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.


ராகு வீட்டைப் பார்த்தால் குடும்ப அரசியல், வாரிசு அரசியல், மக்களை திமுக மிரட்டிக் கொண்டுள்ளதைக் காண முடிகிறது. ஒவ்வொரு மந்திரிகளின் வாரிசுகளும் மூத்த உறுப்பினர்களை ஏறி மிதித்து சீட் வாங்கி முன்னேறும் நிலை. கட்சி ஜனநாயகம் கேலிக்குரியதானதால் மக்கள் வேதனையுடன் இருப்பது திமுக கூட்டணிக்கு பாதகமே.


கேது வீட்டைப் பார்த்தோமானால் திமுக வின் ரியல் எஸ்டேட் வன்முறைகள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், கொள்ளை, தலீத் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரான நிலை ஆகியவற்றைப் பார்க்கலாம். தேர்தல் வந்தால் நீலிக் கண்ணீர் வடிப்பவர்கள் ஆட்சிக் கட்டிலில் இருந்த போது எங்களை மறந்தது ஏன்? என கேள்வி எழுப்பிக் கொண்டுள்ளனர்.


எனவே திமுக இந்த தேர்தலைப் பொறுத்தவரை ஐசியு-வில் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளியின் நிலையில் இருப்பதை ஜாதகத்தில் காண முடிகிறது. ஏதாவது அதிசயம் நடந்தாலொழிய திமுக பிழைப்பது சந்தேகமே.

Thursday, March 24, 2011

2011-ம் ஆண்டு தமிழக சட்டசபை பொதுத் தேர்தல் அதிமுக - தேர்தல் அறிக்கை.24.03.2011.

தமிழகத்தை ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பாதையில் நடைபோட வைக்கவும், தமிழர்களின் மொழி, இன கலாச்சார உணர்வுகளை மீட்டெடுத்து, எதற்கும் கை ஏந்தும் ஏழ்மை நிலையை மாற்றி, தன்மான மிக்க தமிழினத்தை மீண்டும் உருவாக்கும் சுய மரியாதையை மீட்டெடுத்து, எதிர்கால தமிழ் இளைஞர்கள், இளம் பெண்கள் தலை நிமிர்ந்து சொந்தக் காலில் நிற்க, ஏற்ற வழியை உருவாக்கவும்; கல்வி, மருத்துவம், விவசாயம், நதிநீர், அடிப்படை கட்டமைப்பு, வீடு, மின்சாரம் மற்றும் தொழில் துறைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து - இழந்த பெருமையை மீட்டெடுத்து, தமிழகத்தை தலை நிமிரச் செய்வது தான் அதிமுகத்தின் லட்சியம். 

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட வேலை வாய்ப்பை உருவாக்கி, தனி நபர் வருமானத்தை 2 மடங்குக்கு மேல் உயர்த்துவோம்.  ஒவ்வொரு தமிழனும் எதற்கும் ஏங்கும் நிலையை மாற்றி, சுயமரியாதையுடன் வாழ வழிவகை செய்யப்பட்டு, "நாடென்ன செய்தது நமக்கு?" என்ற நிலை மாறி, "நான் நாட்டிற்கு என்ன செய்ய வேண்டும்?" என்று சொல்லும் நிலைக்கு மக்களையும், இளைஞர்களையும் தயார்படுத்தி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிமுறைகள் வகுக்கப்படும். 
 தமிழகத்தின் ஒட்டு மொத்த ஒருங்கிணைந்த நீடித்த தன்னிறைவு பெற்ற வளர்ச்சிக்கு அதிமுக அரசின் சிறப்புத் திட்டங்கள் பின்வருமாறு:-


வேளாண் திட்டங்கள்...

* தமிழகத்தில் இரண்டாம் விவசாய புரட்சித் திட்டம் மக்கள் இயக்கமாக அறிவிக்கப்படும்.  .

* விவசாயியின் தனிநபர் வருமானத்தை 2 முதல் 3 மடங்குக்கு மேல் உயர்த்த சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். 30,000 ஹெக்டேர் நிலப்பரப்பை சிறப்பு சிறுபாசன திட்டத்தில் கொண்டு வருவோம்.
* கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு உதவும் வகையில் வழங்க இருந்த விவசாய கருவிகளை அத்தொழிலாளர்களுக்கு உதவுகிற வகையில் மீண்டும் விவசாய கருவிகளை இலவசமாக வழங்குவோம்.
* தரமான விதைகள், விவசாய இடுபொருள்கள் ஆகியவை தள்ளுபடி விலையில் விவசாயிகளுக்கு கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
* வன விலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு தாமதமின்றி இழப்பீடு கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும். வன விலங்குகள் குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
* மதிப்பு கூட்டப்பட்ட விவசாயத்தை தொழிலாக அறிவிக்கப்பட்டு - உணவு பதப்படுத்தும் சிறப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு, விவசாயிகள் விவசாய நிறுவனங்களில் பங்குதாரர்கள் ஆக்கப்படுவார்கள்.
* அனைத்து மாவட்டங்களிலும் தேவைக்கேற்ற குளிர் பதன கிடங்குகள் ஏற்படுத்தப்படும்.  விவசாய விளை பொருள்கள் சேகரிப்பு நிலையங்களை நவீனப்படுத்துவோம்.

ரூ.1 அரிசி இலவசமாக..
குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தொடரும் என்ற நிலையை மாற்றி பயனாளிகள் அனைவருக்கும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.
* கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு 2,500/- ரூபாயாக உயர்த்தப்படும். அரசு கரும்பு ஆலைகள் நவீனப்படுத்தப்பட்டு, நிர்வாகம் சீரமைக்கப்படும். கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக அரசு மற்றும் தனியார் அரசு ஆலைகள் கொள்முதல் விலையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 
* நுண்ணிய வேளாண்மை திட்டத்தை செம்மைப்படுத்தி, அதன் மூலம் விவசாயிகளை பங்குதாரர்களாகக் கொண்ட விவசாய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, சொட்டு நீர்ப் பாசன வசதி அரசு செலவில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்படும்.
* ஆண்டுக்கு 7 லட்சம் டன் பருப்பு உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பருப்பு கொள்முதல் கொள்கையை உருவாக்கி, தர வேறுபாடு இல்லாமல் துவரம் பருப்பு கிலோ 35 ரூபாய் முதல்
40 ரூபாய்க்குக் குறையாமல் கொள்முதல் செய்யப்படும். உற்பத்தித் தள்ளுபடியாக 300 கிலோ பருப்புக்கு உற்பத்தி செலவு ஊக்கத் தொகையாக 500 ரூபாய் வழங்கப்படும்.

* குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் பருப்பு, மசாலா பொருட்கள், சமையல் எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள் நியாய விலைக் கடைகள் மூலம் அனைத்து நுகர்வோருக்கும் வேறுபாடு இல்லாமல் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.


சுத்திகரிக்கப்பட்ட தூய குடிநீர் திட்டம்...
* வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடி தண்ணீர் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் 5.6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு புதிதாக உருவாக்கப்படும்.
* புதிதாக 1 லட்சம் பேருக்கு போக்குவரத்துத் துறையில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இதன் மூலம் 20,000 தொழிற்சாலைகள் உருவாக வாய்ப்பு ஏற்படும்.


அனைவருக்கும் தரமான மருத்துவம்...
* குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சீரமைக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
* அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட மருத்துவமனைகளில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ மற்றும் பரிசோதனை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
* கிராமங்கள் தோறும் நடமாடும் மருத்துவமனை கிராமத்துக்கே வரும் உன்னத திட்டம் செயல்படுத்தப்படும்.
* 1500 கிராமங்களில் 24 மணி நேரமும் செயல்படும் தொலை தூர மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும்.

நவீன பசுமை வீடு...
* கருணாநிதியின் வீட்டு வசதித் திட்டம் நடைமுறை சாத்தியம் இல்லாத வகையில் இருப்பதாலும் மற்றும் மக்களுக்கு மேலும் நிதிச் சுமையை ஏற்றக் கூடிய ஏமாற்று வேலை என்பதாலும், அதிமுக அரசு நவீன பசுமை வீட்டு வசதித் திட்டத்தை அறிமுகப்படுத்தும்.
அதன்படி, அனைவருக்கும் குறைந்த விலையில் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் உள்ள, சூரிய சக்தி மின்சார பயன்பாட்டோடு கூடிய நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும்.
வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் 3 லட்சம் மக்களுக்கு 300 சதுர அடியில் 1,80,000/- ரூபாய் செலவில் இலவசமாக நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும். மேலும் 40 லட்சம் நடுத்தர வகுப்பு மக்களுக்கு இத்திட்டம் 1 லட்சம் ரூபாய் மானியத்துடன் விரிவாக்கம் செய்யப்படும். 
வீடில்லா ஏழை குடும்பங்களுக்கு வீடு கட்ட 3 சென்டில் இடம் அளிக்கப்படும்.

இருண்ட தமிழகம் ஒளி பெற..
* இருண்ட தமிழகம் ஒளிமயமாக்கப்படும். மின்சார வாரியம் திருத்தி அமைக்கப்பட்டு, மின் விநியோகம் சீராக்கப்பட்டு, மின் திருட்டு தடுக்கப்படும். வீடு, தொழில் மற்றும் விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும்.
* அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இன்னும் 4 ஆண்டுகளுக்குள் மும்முனை மின்சார இணைப்பு மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
மின்சார திருட்டை ஒடுக்க முன்னாள் ராணுவத்தினரைக் கொண்டு மின்சார பாதுகாப்புப் படை அமைக்கப்படும்.
* வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் வீடுகளுக்கு சூரிய ஒளி மூலம் தடையில்லா மின்சார வசதி இலவசமாக வழங்கப்படும். கிராமப்புற தெரு விளக்குகள் சூரிய ஒளி மின்சாரத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
    
சிறப்பு உணவுப் பூங்கா...

* விவசாய உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் பூங்காக்கள், குளிர்பதன கிடங்குகள், தொழிற் பூங்காக்கள் மாவட்டத்தில் அமைக்கப்படும்.
* குறைந்த விலையில் காய்கறிகள், பழங்கள் மற்றும் அனைத்து விவசாய விளை பொருட்களும் மக்களுக்கு விரைந்து கிடைக்கின்ற வகையில் நவீன மக்கள் சந்தைகள் மற்றும் பொருட்களை பதப்படுத்தப்பட வேண்டிய குளிர்சாதன வசதிகள் செய்து தரப்படும். 
* விவசாயிகளை பங்குதாரர்களாகக் கொண்ட 6 ஆடை அலங்கார சிறப்பு பொருளாதார மண்டலங்கள் துவக்கப்படும். இதன் மூலம் தமிழ் நாட்டில் 70 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.

ஆடு, மாடுகள் இலவசம்...
* மீண்டும் ஒரு வெண்மை புரட்சியை உருவாக்க திட்டம் தீட்டப்படும். 2016ஆம் ஆண்டுக்குள் 6000 கிராமங்களில் சீரமைக்கப்பட்ட பால் பண்ணைகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பால் உற்பத்தியை தினமும் 2.5 மில்லியன் லிட்டரில் இருந்து 10 மில்லியன் லிட்டராக பெருக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். அதை ஊக்குவிக்கும் வகையில் 6000 கிராமங்களில் சுமார் 60,000 பால் கறவை மாடுகள் இலவசமாக வழங்க வழிவகைகள் செய்யப்படும்.
* வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள அடித்தட்டு குடும்பங்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும். கால்நடை வளத்தைப் பெருக்கும் வகையில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்.

அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்டாப்...
* மாணவர்களின் புத்தகச் சுமை குறைக்கப்படும். தரமான, இலவச கல்வி அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
* மாணவர்களுக்கு 4 சீருடைகளும், காலணிகளும் இலவசமாக வழங்கப்படும்.
* 10-12ஆம் வகுப்பு வரை வேறுபாடு இல்லாமல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக 1,000/- ரூபாய் முதல் 5,000/- ரூபாய் வரை வழங்கப்படும்.
* பள்ளியில் படிக்கும் +1 மற்றும் +2 மாணவ, மாணவியர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் இலவசமாக வழங்கப்படும்.
* அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் (கலை, அறிவியல் மற்றும் பொறியியல்) மற்றும் பல் தொழில் பட்டய கல்லூரிகளில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப் டாப் கம்ப்யூட்டர் வழங்கப்படும்.

மீனவர்களுக்கு கூடுதல் நிதி...
* மீனவர் பாதுகாப்பு படை அமைக்கப்படும்
* இயந்திர மீன்பிடி படகுகள் வாங்கத் தேவையான மானியம் வழங்கப்படும்.
* மீன் உற்பத்திக்கு உகந்த வழியில் மீன் பிடிக்க விலக்கு அளிக்கப்பட்ட 45 நாட்களில், மீனவ குடும்பத்திற்கான உதவித் தொகை 2,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
* பருவ காலத்தால் 4 மாதங்களுக்கு மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள இயலாத சூழ்நிலையில் இருக்கும் மீனவ குடும்பங்களுக்கு உதவித் தொகையாக 4,000/- ரூபாயாக வழங்கப்படும். 
* கச்சத் தீவை மீட்டெடுத்து தமிழக மீனவர் நலன் காக்கப்பட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறுபான்மையினர்களுக்கு சிறப்புத் திட்டம்...
* தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர்களுக்கு வேலை வாய்ப்பு பெருகி உள்ள துறைகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் வேலை வாய்ப்புக்கு தகுதி உடையவர்களாக உருவாக்கப்படுவர். 
* தொழில் தொடங்க முனைவோருக்கு 25 சதவீத மானியத்தில் கடன் உதவித் தொகை வழங்கப்படும். அரசுப் பணியில் காலி இடங்கள் நிரப்பப்படும். புதிய வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.
* ஆதிதிராவிடர் மற்றும் மலைவாழ் மாணவர்களுக்கு தங்கும் விடுதிகள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும். உணவு கட்டணம் மற்றும் உதவித் தொகைகள் கூட்டி வழங்கப்படும்.
இளைஞர்களுக்காக...
* படித்த இளைஞர்கள், இளம் பெண்களுக்கு தொழில் முனைவோருக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, லாப நோக்கத்துடன் சுய தொழில் தொடங்க - அரசு பங்குத் தொகை தகுதிக்கேற்ப 25 லட்சம் ரூபாய் வரை அளித்து, வங்கிக் கடன் ஏற்பாடு செய்து தரப்படும்.
* வீடுகளில் நடைபெறும் திருட்டு, கொள்ளைகளை முற்றிலும் தடுக்க தற்காப்பு கலை பயின்ற இளைஞர்களைக் கொண்டு சிறப்பு சுய பாதுகாப்பு படைகள் அமைக்கப்படும். அவர்கள் சம்பவம் நடக்கும் இடத்திற்கு விரைந்து வந்து தடுத்து பாதுகாக்க நவீன முறைகளுடன் பயிற்சி அளிக்கப்படும். வீட்டை பூட்டி வெளியூர் செல்லும் மக்களின் வீடுகளும் பாதுகாக்கப்படும்.

சுய உதவிக் குழு சிறப்புத் திட்டம்..
* சுய உதவிக் குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.  அதில் 25 சதவிகிதம் வரை மானியம் வழங்கப்படும்.

* திருநங்கைகளுக்கான சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரையிலான மதிப்பீட்டில் தொழில் தொடங்க ஏற்பாடு செய்து அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும். 


ஃபேன், மிக்ஸி, கிரைண்டர் ஃப்ரீ...
* தாய்மார்களுக்கு ஒரு ஃபேன், ஒரு மிக்ஸி, ஒரு கிரைண்டர் ஆகிய மூன்று பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.
* குழந்தையை பேணி பாதுகாக்க பணிபுரியும் தாய்மார்களுக்கு மகப்பேறு காலச் சலுகையாக 6 மாத விடுமுறையும், 12,000/- ரூபாய் நிதி உதவியும் வழங்கப்படும்.

இலவச பஸ் பாஸ்...
* 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் மற்றும் அரசு பேருந்துகளில் பக்கத்து நகரங்கள், கிராமங்களுக்கு சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.

இலங்கை தமிழ் அகதிகளுக்கு...
* இலங்கை தமிழ் அகதிகளுக்கு தரமான இருப்பிடம், தண்ணீர் மற்றும் சுற்றுப்புற சுகாதார மேம்பாடு போன்றவை வழங்கப்படும். தரமான மருத்துவ வசதி செய்து தரப்படும்.  கல்வி பயில தேவையான உதவிகள், சிறப்பு வேலை வாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்.
* அகதிகளாக வந்தவர்கள் தமிழகத்திலே கௌரவமாக வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
* இலங்கை தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டில் அடிமைகள் போல் வாழும் நிலைமையை மாற்ற மத்திய அரசை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
* இலவச திட்டங்கள் இலங்கை தமிழ் அகதிகள் முகாமுக்கும் நீட்டிக்கப்படும். 

நவீன நீர்வழிச் சாலை..
* தமிழக நதிகளை நீர்வழிச் சாலைகள் மூலம் இணைத்து, தண்ணீர் வீணாகாமல், வெள்ளப் பெருக்கு நீரையும் வரைமுறைப்படுத்தி மற்றும் தேக்கி, தேவையான பாசனப் பகுதிக்கு, தேவையான பொழுது பயன்படுத்துவோம். நவீன நீர்வழிச் சாலைக்கு உலக வங்கி கடன் பெற்று செயல்படுத்தப்படும்.
* காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்து நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
* அண்டை மாநில நதி நீர் பிரச்சினைகள் குறித்து மத்திய, மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண நல்லிணக்க நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும். 
* முல்லை பெரியாறு மற்றும் அனைத்து நதி நீர் பிரச்சினைகளை தீர்க்க நிலையான தீர்வு எட்ட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ் மொழிக்காக...
* தமிழை இந்திய ஆட்சி மொழியாக்க மத்திய அரசை வலியுறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 
* தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும்.

* கணினி வழித் தமிழ் வளர்ச்சிக்கும், ஆராய்ச்சி மேம்பாட்டிற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தனித் தன்மையை இழந்த தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களை சீரமைத்து, தமிழ் மொழி உலகம் எல்லாம் பரவும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
* தமிழ் மொழியை நீதிமன்றங்களில் நீதித் துறையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* அரசு ஊழியர்களுக்காக...
* அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, பணி வரன்முறை உள்ளிட்ட அனைத்து குறைபாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் அவ்வப்போது நிறைவு செய்யப்படும்.
* அரசு நிர்வாகத்தில் இருக்கும் துறை மற்றும் நிர்வாக ரீதியான பணி சிக்கல்கள் ஆராயப்பட்டு அவற்றை சீராக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர்கள் தற்போது அனுபவித்து வரும் அனைத்து சலுகைகளும் தொடரும்.
மாற்றுத் திறனாளிகளுக்காக...
* மாற்றுத் திறனாளிகளுக்கென 3 சதவீத இட ஒதுக்கீடு அரசுப் பணியில் ஒதுக்கப்படும்.  அதை உடனடியாக அரசு நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். 

கேபிள் டிவி அரசுடமை... 
* தமிழகத்தில் கேபிள் டிவி தொழில் அரசுடமையாக்கப்படும்; ஏகபோகம் தடுக்கப்படும்.  அனைவருக்கும் தொழில் செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.

* அனைத்து மக்களுக்கும் அரசு கேபிள் டிவி இணைப்பு அரசு மானியத்துடன் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும். டிடிஎச் சேவைகள் மக்களுக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* கேபிள் டிவி மூலமாக கடைசி மைலில் வீட்டுக்கு இணைப்பு கொடுப்பவர்களது தொழில் பாதுகாக்கப்படும். அவர்கள் தொடர்ந்து தொழில் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலை வாய்ப்பு...
* செயல்படாத கிராமப்புற பிபிஓ மையங்களின் இன்றைய வடிவத்தை மாற்றம் செய்து, மாவட்டம் தோறும், கிராமங்களில் 150 கிராமப்புற பிபிஓ மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அவர்களுக்கு அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் மூலமாக வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும்.  இதன் மூலம் 15,000 இளைஞர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பும், 1 லட்சம் கிராமபுற மக்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மோனோ ரயில் திட்டங்கள்..
சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூருக்கு சிங்கப்பூரில் உள்ளபடி மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

திருமண உதவித் தொகை...
* தற்போது வழங்கப்பட்டு வரும் 25,000/- ரூபாயுடன், தங்கத்தின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, 4 கிராம் (1/2 சவரன்) தங்கம் மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.
* இளநிலை அல்லது டிப்ளொமா பட்டம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகை 50,000/- ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கம் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.

சட்டம் ஒழுங்கு கண்டிப்பு... 
  * சட்டம் ஒழுங்கு கண்டிப்பாக எவ்வித தயவு தாட்சண்யமும் இல்லாமல் நிலை நாட்டப்படும். 
* மக்கள் அமைதியாக வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். 
காவல் துறையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். 

* முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்.) உடனடியாக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* பணியில் மரணமடையும் காவலர்களுக்கு - கருணைத் தொகை 3 லட்சம் ரூபாய் அளவிற்கு உர்த்தப்படும்.
திருப்பூர் சாயக் கழிவு..
* திருப்பூர் சாயக் கழிவு பிரச்னையை பரிசீலித்து அதன் கழிவுகளை சுத்திகரிக்கத் தேவையான தொழில்நுட்பத்துடன் விஞ்ஞான வழியில் கழிவு அகற்றும் நிலையம் உருவாக்கப்படும்.

முதியோருக்கு கூடுதல் உதவித் தொகை...
* முதியோர், உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு மாத உதவித் தொகை 1,000/- ரூபாய் அளவிற்கு உயர்த்தி வழங்கப்படும். 
* அரசு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு அரசு மானியம் இரண்டு மடங்காக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தேவைக்கு ஏற்றபடி அரசு விடுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுத்துவதோடு, அவைகளின் கூட்டமைப்புகள்,

பிற மொழி பயிற்சி... 
* பள்ளிகளில் தாய் மொழியோடு பிற இந்திய மொழிகள் மற்றும் அன்னிய மொழிகள் பயில விரும்புபவர்கள் விரும்புகின்ற வகையில் பயில சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்.

* தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், வாரிசு வேலைகள் வழங்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
நுழைவுத் தேர்வு..
* மருத்துவ கல்வி பொது நுழைவுத் தேர்வு முறை தமிழகத்தில் அமுல்படுத்தப்பட மாட்டாது.

108 ஆம்புலன்ஸ்..
சில மாநிலங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள, தமிழகத்தில் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் திட்டம் மேம்படுத்தப்பட்டு, ஆம்புலன்ஸ் ஊர்திகளின் எண்ணிக்கையை கூட்டி, நடைமுறையில் உள்ள நிர்வாக குறைகளை களைந்து சிறப்பாக செயல்படுத்தப்படும்.

பள்ளியிலேயே சாதிச் சான்றிதழ்...
ஒவ்வொரு வருடமும் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ் மற்றும் பள்ளி சார்ந்த இதர சான்றிதழ்கள் அனைத்தும் பள்ளியிலேயே வழங்கப்படும். 
* ஊக வணிகம் தடுக்கப்பட்டு, பதுக்கல் ஒழிக்கப்படும்.
* கருணாநிதியின் குடும்பத்தினர்களாலும், திமுக அமைச்சர்களாலும், அவர்களது கூலிப் படைகளாலும் மக்களை அநியாயமாக மிரட்டி பறிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் சொத்துக்களை மீட்டு, அவற்றை உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
* சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர சாலை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு திட்டம் நடைமுறை படுத்தப்படும்.

கோடம்பாக்கத்தை மீட்க...
திரைப்படத் துறையில் உள்ள பிரச்னைகளை ஆராய்ந்து, ஏற்பட்டுள்ள பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படும். 
* நடைமுறையில் உள்ள மக்களுக்குப் பயன் அளிக்கும் திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

Monday, March 21, 2011

அ.தி.மு.க. புதிய வேட்பாளர்கள் பட்டியல்

சென்னை, மார்ச்.21,2011
அதிமுகவின் புதிய வேட்பாளர் பட்டியல் வெளியீடு.
அ.தி.மு.க.,வேட்பாளர்கள்புதியபட்டியல்வெளியிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஒரு சில தொகுதிகள் கூட்டணி ‌கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அ.தி.மு.க., வேட்பாளர்கள் புதிய பட்டியல் வெளியிடப்பட்டது. 
மொத்தம் 160 பேர் கொண்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வருமாறு:


1.ஸ்ரீரங்கம் (139) -  ஜெ ஜெயலலிதா

2.பொன்னேரி (தனி) (2) - பொன். ராஜா
3.திருவள்ளூர் (4)- ரமணா   
4.பூவிருந்தவல்லி (தனி) (5)- இரா. மணிமாறன்
5.ஆவடி (6)- எஸ். அப்துல் ரஹீம்
6.அம்பத்தூர் (8)- எஸ். வேதாச்சலம் 
7.மாதவரம் (9)- வி. மூர்த்தி 
8.திருவொற்றியூர் (10)- கே. குப்பன்
9.டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (11)- பி. வெற்றிவேல்
10.கொளத்தூர் (13)- சைதை சா. துரைசாமி
11.வில்லிவாக்கம் (14)-  பிரபாகர
12.திரு.வி.க. நகர் (தனி) (15)- வ. நீலகண்டன்
13.ராயபுரம் (17)- டி. ஜெயக்குமார் 
14.துறைமுகம் (18)- பழ. கருப்பையா
15.ஆயிரம்விளக்கு (20)-  பா. வளர்மதி
16.அண்ணாநகர் (21)-  எஸ். கோகுல இந்திரா
17.சைதாப்பேட்டை (23)- ஜி. செந்தமிழன்
18.தியாகராயநகர் (24)- வி.பி. கலைராஜன்
19.மயிலாப்பூர் (25)-  ஆர். ராஜலட்சுமி
20.வேளச்சேரி (26)- எம்.கே. அசோக்
21.சோழிங்கநல்லூர் (27)- கே.பி. கந்தன்
22.ஸ்ரீபெரும்புதூர் (தனி) (29)- மொளச்சூர் இரா. பெருமாள்
23.பல்லாவரம் (30)- ப. தன்சிங்
24.தாம்பரம் (31)- சின்னையா
25.திருப்போரூர் (33)- தண்டரை கே. மனோகரன்


26.செய்யூர் (தனி) (34)- வி.எஸ். ராஜி
27.மதுராந்தகம் (தனி) (35)-  எஸ். கணிதா சம்பத்
28.உத்திரமேரூர் (36)- வாலாஜாபாத் பா. கணேசன்
29.காஞ்சிபுரம் (37)- வி. சோமசுந்தரம்
30.அரக்கோணம் (தனி) (38)- சு. ரவி
31.காட்பாடி (40)- எஸ்.ஆர்.கே. அப்பு (எ) ராதாகிருஷ்ணன்
32.ராணிப்பேட்டை (41)- அ. முஹம்மத்ஜான்
33.ஆற்காடு (42)- ஆர். சீனிவாசன்
34.வேலூர் (43)- டாக்டர் வி.எஸ். விஜய்
35.வாணியம்பாடி (47)- கோவி. சம்பத்குமார்
36.ஜோலார்பேட்டை (49)- கே.சி. வீரமணி
37.திருப்பத்தூர் (50)- கே.ஜி. ரமேஷ்
38.ஊத்தங்கரை (தனி) (51)-  மனோரஞ்சிதம் நாகராஜ்
39.பர்கூர் (52)- கே.இ. கிருஷ்ணமூர்த்தி 
40.கிருஷ்ணகிரி (53)- கே.பி. முனுசாமி
41.பாலக்கோடு (57)- கே.பி. அன்பழகன்
42.பாப்பிரெட்டிப்பட்டி (60)- பி. பழனியப்பன்
43.திருவண்ணாமலை (63)- எஸ். இராமச்சந்திரன்
44.கீழ்பென்னாத்தூர் (64)- ஏ.கே. அரங்கநாதன்
45.கலசபாக்கம் (65)- கிருஷ்ணமூர்த்தி
46.போளூர் (66)-  எல். ஜெயசுதா லட்சுமிகாந்தன்
47.செய்யார் (68)- முக்கூர் என். சுப்பிரமணியன்
48.வந்தவாசி (தனி) (69)- செய்யாமூர் வே. குணசீலன்
49.மைலம் (71)- கே.பி. நாகராஜன்
50.திண்டிவனம் (தனி) (72)- டாக்டர் த. அரிதாஸ்


51.வானூர் (தனி) (73)- ஐ. ஜானகிராமன்
52.விழுப்புரம் (74)- சி.வி. சண்முகம்
53.உளுந்தூர்பேட்டை (77)- இரா. குமரகுரு
54.சங்கராபுரம் (79)- ப. மோகன்
55.கள்ளக்குறிச்சி (தனி) (80)-  பா. அழகுவேல் பாபு
56.ஆத்தூர் (தனி) (82)- எஸ். மாதேஸ்வரன்
57.ஏற்காடு (83) - செ. பெருமாள்
58.ஓமலூர் (84)- பல்பாக்கி சி. கிருஷ்ணன் 
59.எடப்பாடி (86)- எடப்பாடி கே. பழனிசாமி
60.சங்ககிரி (87)-  விஜயலட்சுமி பழனிச்சாமி 
61.சேலம் (மேற்கு) (88)- ஜி. வெங்கடாஜலம்
62.சேலம் (தெற்கு) (90)- எம்.கே. செல்வராஜ்
63.வீரபாண்டி (91)- எஸ்.கே. செல்வம்
64.ராசிபுரம் (தனி) (92)- ப. தனபால்
65.நாமக்கல் (94)- கே.பி.பி. பாஸ்கர்
66.குமாரபாளையம் (97)- பி. தங்கமணி
67.ஈரோடு (மேற்கு) (99)- கே.வி. ராமலிங்கம்
68.மொடக்குறிச்சி (100)- ஆர்.என். கிட்டுசாமி
69.தாராபுரம் (தனி) (101)- கே. பொன்னுசாமி
70.காங்கேயம் (102)- என்.எஸ்.என். நடராஜ்
71.பெருந்துறை (103)- தோப்பு என்.டி. வெங்கடாச்சலம்
72.பவானி (104)- பி.ஜி. நாராயணன்
73.அந்தியூர் (105)- எஸ்.எஸ். ரமணீதரன்
74.கோபிசெட்டிப்பாளையம் (106)- கே.ஏ. செங்கோட்டையன்
75.உதகமண்டலம் (108)- புத்தி சந்திரன்


76.மேட்டுப்பாளையம் (111)- ஓ.கே. சின்னராஜ்
77.அவினாசி (தனி) (112)- ஏ.ஏ. கருப்புசாமி
78.திருப்பூர் (வடக்கு) (113)- எம்.எஸ்.எம். ஆனந்தன்
79.பல்லடம் (115)- பல்லடம் கே.பி. பரமசிவம்
80.கவுண்டம்பாளையம் (117)- வி.சி. ஆறுக்குட்டி
81.கோயம்புத்தூர் (வடக்கு) (118)- தா. மலரவன்
82.தொண்டாமுத்தூர் (119)- எஸ்.பி. வேலுமணி
83.கோயம்புத்தூர் (தெற்கு) (120)- சேலஞ்சர் துரை (எ) ஆர். துரைசாமி,
84.சிங்காநல்லூர் (121)- ஆர். சின்னசாமி
85.கிணத்துக்கடவு (122)- செ. தாமோதரன்
86.பொள்ளாச்சி (123)- எம்.கே. முத்துகருப்பண்ணசாமி
87.உடுமலைப்பேட்டை (125)- பொள்ளாச்சி ஏ. ஜெயராமன்
88.மடத்துக்குளம் (126)- சி. சண்முகவேலு
89.பழனி (127)- கே.எஸ்.என். வேணுகோபாலு
90.ஒட்டன்சத்திரம் (128)- பி. பாலசுப்பிரமணி
91.நத்தம் (131)- இரா. விசுவநாதன்
92.வேடசந்தூர் (133)- ச. பழனிச்சாமி
93.அரவக்குறிச்சி (134)- வி. செந்தில்நாதன்
94.கரூர் (135)- வி. செந்தில்பாலாஜி
95.கிருஷ்ணராயபுரம் (தனி) (136)- எஸ். காமராஜ்,
96.குளித்தலை (137)- ஹ. பாப்பாசுந்தரம்
97.மணப்பாறை (138)- ஆர். சந்திரசேகர்
98.திருச்சிராப்பள்ளி (மேற்கு) (140)- என். மரியம்பிச்சை
99.திருச்சிராப்பள்ளி கிழக்கு (141)- ஆர். மனோகரன்
100.மணச்சநல்லூர் (144)- பூனாட்சி


101.முசிறி (145)- என்.ஆர். சிவபதி
102.துறையூர் (தனி) (146)-  இந்திராகாந்தி 
103.பெரம்பலூர் (தனி) (147)- இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்
104.அரியலூர் (149)- துரை. மணிவேல்
105.ஜெயங்கொண்டம் (150)- பா. இளவழகன்
106.நெய்வேலி (153)- எம்.பி.எஸ். சிவசுப்பிரமணியன்
107.கடலூர் (155)- எம்.சி. சம்பத்,
108.குறிஞ்சிப்பாடி (156)- சொரத்தூர் இரா. இராஜேந்திரன்
109.புவனகிரி (157)-  செல்வி ராமஜெயம்
110.காட்டுமன்னார் கோயில் (தனி) (159)- என். முருகுமாறன்
111.சீர்காழி (தனி) (160)-  ம. சக்தி
112.பூம்புகார் (162)- எஸ். பவுன்ராஜ்
113.நாகப்பட்டினம் (163)- கே.ஏ. ஜெயபால்
114.வேதாரண்யம் (165)- என்.வி. காமராஜ்
115.மன்னார்குடி (167)- சிவா. ராஜமாணிக்கம்
116.திருவாரூர் (168)- குடவாசல் எம். இராசேந்திரன்
117.நன்னிலம் (169)- ஆர். காமராஜ்
118.திருவிடைமருதூர் (தனி) (170)- பாண்டியராஜன்
119.கும்பகோணம் (171)- இராம. இராமநாதன்
120.பாபநாசம் (172)- இரா. துரைக்கண்ணு
121.திருவையாறு (173)- எம். ரெத்தினசாமி
122.தஞ்சாவூர் (174)- எம். ரெங்கசாமி
123.ஒரத்தநாடு (175)- ஆர். வைத்திலிங்கம்
124.கந்தர்வகோட்டை (தனி) (178)- ந. சுப்ரமணியன்
125.விராலிமலை (179)- டாக்டர் சி. விஜயபாஸ்கர்


126.திருமயம் (181)- பி.கே. வைரமுத்து 
127.ஆலங்குடி (182)- கு.ப. கிருஷ்ணன்
128.அறந்தாங்கி (183)- மு. ராஜநாயகம்
129.காரைக்குடி (184)- சோழன் சித. பழனிச்சாமி
130.திருப்பத்தூர் (185)- ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்  
131.மானாமதுரை (தனி) (187)- ம. குணசேகரன்
132.மேலூர் (188)- ஆர். சாமி 
133.மதுரை கிழக்கு (189)- கே. தமிழரசன்
134.சோழவந்தான் (தனி) (190)- எம்.வி. கருப்பையா
135.மதுரை வடக்கு (191)- ஏ.கே. போஸ்
136.மதுரை மேற்கு (194)- செல்லூர் கே. ராஜூ
137.திருமங்கலம் (196)- ம. முத்துராமலிங்கம்
138.ஆண்டிபட்டி (198)- தங்க தமிழ்செல்வன்
139.போடிநாயக்கனூர் (200)- ஓ. பன்னீர்செல்வம்
140.ராஜபாளையம் (202)- கே. கோபால்சாமி
141.சாத்தூர் (204)- உதயகுமார்
142.சிவகாசி (205)- மு.கூ. ராஜேந்திர பாலாஜி
143.அருப்புக்கோட்டை (207)- வைகைச்செல்வன்
144.பரமக்குடி (தனி) (209)- டாக்டர் எஸ். சுந்தர்ராஜ்
145.முதுகுளத்தூர் (212)- மு. முருகன்
146.விளாத்திகுளம் (213)- ஜி.வி. மார்க்கண்டேயன்
147.தூத்துக்குடி (214)- ஏ. பால்
148.திருச்செந்தூர் (215)- பி.ஆர். மனோகரன்,
149.ஸ்ரீவைகுண்டம் (216)- எஸ்.பி. சண்முகநாதன்
150.கோவில்பட்டி (218)- கடம்பூர் செ. ராஜு


151.சங்கரன்கோவில் (தனி) (219)- சொ. கருப்பசாமி
152.வாசுதேவநல்லூர் (தனி) (220)- டாக்டர் எஸ். துரையப்பா

153.கடையநல்லூர் (221)- பி. செந்தூர்பாண்டியன்
154.ஆலங்குளம் (223)- பி.ஜி. ராஜேந்திரன்
155.திருநெல்வேலி (224)- நயினார் நாகேந்திரன்
156.அம்பாசமுத்திரம் (225)- இசக்கி சுப்பையா
157.கன்னியாகுமரி (229)- பச்சைமால்
158.நாகர்கோவில் (230)- நாஞ்சில் ஏ. முருகேசன்
159.குளச்சல் (231)- பி. லாரன்ஸ்
160.கிள்ளியூர் (234)- ஆர். ஜார்ஜ்

Thursday, March 17, 2011


அடுத்த மாதம் 13ம் தேதி, சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.. அ.தி.மு.க., போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை புரட்சித்தலைவி ஜெயலலிதா  வெளியிட்டார்.ஸ்ரீரங்கம் தொகுதியில் முதன் முறையாக புரட்சித்தலைவி ஜெயலலிதா போட்டியிடுகிறார்.


அ.தி.மு.க., போட்டியிடும் 160 தொகுதிகள் விபரம் :

1.ஸ்ரீரங்கம் -புரட்சித்தலைவி ஜெயலலிதா
2.கும்மிடிபூண்டி - வி.கோபால்நாயுடு
3.பொன்னேரி (தனி) - பொன். ராஜா
4.திருவள்ளூர் - பி.வி. ரமணா
5.பூந்தமல்லி(தனி) என்.எஸ்.ஏ. ஆர். மணிமாறன்
6.ஆவடி - அப்துல் ரகீம்
7.அம்பத்தூர் - வேதாசலம்
8.மாதவரம் - வி.மூர்த்தி
9.திருவொற்றியூர் -கே.குப்பன்
10.ஆர்.கே.நகர் - வி.மதுசூதனன்
11.பெரம்பூர் - பி.வெற்றிவேல்
12.வில்லிவாக்கம் - ஜெ.சி.டி.பிரபாகரன்
13.திரு.வி.க.நகர்(தனி) - வ. நீலகண்டன்
14.ராயபுரம் - டி.ஜெயக்குமார்
15. துறைமுகம் - பழ.கருப்பையா
16.ஆயிரம்விளக்கு - பா. வளர்மதி
17.அண்ணாநகர் -எஸ்.கோகுல இந்திரா
18.விருகம்பாக்கம் - ஆர்.கமலகண்ணன்
19.சைதாப்பேட்டை - ஜி.செந்தமிழன்
20.தி.நகர் - வி.பி.கலைராஜன்
21.மயிலாப்பூர் -ஆர்.ஜானகி
22.வேளச்சேரி - எம்.கே.அசோக்
23.சோழிங்கநல்லூர் - கே.பி.கந்தன்
24.ஆலந்தூர் - வி.என்.பி.வெங்கட்ராமன்
25.ஸ்ரீபெரும்புதூர் - மௌச்சூர் இரா. பெருமாள்
26. பல்லாவரம் - ப.தன்சிங்
27. தாம்பரம் - டி.கே.சின்னையா
28. செங்கல்பட்டு - கே.என்.ராமச்சந்திரன்
29. திருப்போரூர் - தண்டரை கே.மனோகரன்
30. செய்யூர்(தனி) - வி.எஸ்.ராஜி
31. மதுராந்தகம்(தனி) - எஸ்.கணிதா சம்பத்
32. உத்திரமேரூர் - வாலாஜாபாத் பா. கணேசன்
33. காஞ்சிபுரம் - வி.சோமசுந்தரம்
34. காட்பாடி - எஸ்.ஆர்.கே. அப்பு(எ) ராதாகிருஷ்ணன்
35. ராணிப்பேட்டை - அ.முகமதுஜான்
36. வேலூர் - டாக்டர் வி.எஸ்.விஜய்
37. ஜோலார்பேட்டை -கே.சி.வீரமணி
38. ஊத்தங்கரை(தனி) - மனோரஞ்சிதம் நாகராஜ்
39. பர்கூர் - கே.இ.கிருஷ்ணமூர்த்தி
40. கிருஷ்ணகிரி - கே.பி.முனுசாமி
41. பாலக்கோடு - கே.பி.அன்பழகன்
42. அரூர் - ஆர்.ஆர்.முருகன்
43. கலசப்பாக்கம் - அக்ரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி
44. செஞ்சி - தமிழ்மொழி ராஜதத்தன்
45. மயிலம் - கே.பி.நாகராஜன்
46. திண்டிவனம்(தனி) - டாக்டர் த.அரிதாஸ்
47. விழுப்புரம் - சி.வி.சண்முகம்
48. விக்கிரவாண்டி - சிந்தாமணி ஆர்.வேலு
49. உளுந்தூர்பேட்டை - ரா.குமரகுரு
50. சங்கராபுரம் -பா. மோகன்
 

51. கள்ளகுறிச்சி(தனி) - அழகுவேல் பாபு
52. ஏற்காடு(எஸ்டி) - செ.பெருமாள்
53. ஓமலூர் - பல்பாக்கி சி.கிருஷ்ணன்
54. எடப்பாடி - கே.பழனிசாமி
55. சேலம் மேற்கு - ஜி.வெங்கடாசலம்
56. சேலம் வடக்கு - விஜயலட்சுமி பழனிச்சாமி
57. சேலம் தெற்கு - என்.கே.செல்வராஜ்
58. வீரபாண்டி - எஸ்.கே.செல்வம்
59. ராசிபுரம்(தனி) - பா.தனபால்
60. குமாரபாளையம் - பி.தங்கமணி
61.ஈரோடு கிழக்கு - ஆர்.மனோகரன்
62. ஈரோடு மேற்கு - கே.வி.ராமலிங்கம்
63.மொடக்குறிச்சி - ஆர்.என்.கிட்டுசாமி
64.தாராபுரம்(தனி) - கே. பொன்னுசாமி
65.காங்கயம் - என்.எஸ்.என். நடராஜ்
66.பெருந்துறை - தோப்பு என்.டி.வெங்கடாசலம்
67.பவானி - எம்.ஆர்.துரை
68.அந்தியூர் - எஸ்.எஸ்.ரமணிதரன்
69.கோபிசெட்டிபாளையம் - கே.ஏ.செங்கோட்டையன்
70.ஊட்டி - புத்தி சந்திரன்
71.மேட்டுப்பாளையம் - ஓ.கே. சின்னராஜ்
72.அவினாசி(தனி) - ஏ.ஏ.கருப்புசாமி
73.திருப்பூர் வடக்கு -எம்.எஸ்.எம். ஆனந்தன்
74.திருப்பூர் தெற்கு - ஏ.விசாலாட்சி
75. பல்லடம் - கே.பி.பரமசிவம்
76. சூலூர் - செ.ம.வேலுசாமி
77. கவுண்டம்பாளையம் - வி.சி.ஆறுக்குட்டி
78. கோவை வடக்கு - தா.மலரவன்
79. தொண்டாமுத்தூர் - எஸ்.பி.வேலுமணி
80. கோவை தெற்கு - சேலஞ்சர் துரை (எ) ஆர். துரைசாமி
81. சிங்காநல்லூர் - ஆர்.சின்னசாமி
82. கிணத்துக்கடவு - செ.தாமோதரன்
83. பொள்ளாச்சி - எம்.கே.முத்துகருப்பண்ணசாமி
84. உடுமலைப்பேட்டை - பொள்ளாச்சி வி.ஜெயராமன்
85. மடத்துக்குளம் - சி.சண்முகவேலு
86. பழனி - கே.எஸ்.வேணுகோபாலு
87. ஒட்டன்சத்திரம் - பி.பாலசுப்ரமணி
88. நத்தம் - ரா.விசுவநாதன்
89. திண்டுக்கல் - பி.ராமுதேவர்
90.வேடசந்தூர் - சா. பழனிசாமி
91. அரவக்குறிச்சி - வி.செந்தில்நாதன்
92. கரூர் - வி.செந்தில் பாலாஜி
93. கிருஷ்ணராயபுரம்(தனி) - எஸ்.காமராஜ்
94. குளித்தலை - ஏ.பாப்பாசுந்தரம்
95. மணப்பாறை - ஆர்.சந்திரசேகர்
96. திருச்சி மேற்கு - என்.மரியம்பிச்சை
97. திருச்சி கிழக்கு - ஆர்.மனோகரன்
98. திருவெறும்பூர் - டாக்டர் சி. விஜயபாஸ்கர்
99. முசிறி - என்.ஆர்.சிவபதி
100 பெரம்பலூர்(தனி) - இளம்பை ரா. தமிழ்செல்வன்
 

101 .கடலூர் - எம்.சி.சம்பத்
102. குறிஞ்சிப்பாடி - சொரத்தூர் ரா. ராஜேந்திரன்
103. சீர்காழி(தனி) - திருமதி மா. சக்தி
104. பூம்புகார் - எஸ்.பவுன்ராஜ்
105. நாகப்பட்டினம் - கே.ஏ.ஜெயபால்
106. கீழ்வேளூர்(தனி) - திருவாரூர் அசோகன்
107. திருத்துறைபூண்டி(தனி) - டாக்டர் கே. கோபால்
108. மன்னார்குடி - சிவா. ராஜமாணிக்கம்
109. திருவாரூர் - குடவாசல் எம்.ராஜேந்திரன்
110. நன்னிலம் - ஆர்.காமராஜ்
111. கும்பகோணம் - ராம.ராமநாதன்
112. பாபநாசம் - ரா. துரைகண்ணு
113. திருவையாறு - எம்.ரங்கசாமி
114. ஒரத்தநாடு - ஆர்.வைத்திலிங்கம்
115. கந்தர்வக்கோட்டை(தனி) - நா.சுப்ரமணியன்
116. விராலிமலை - வி.சி.ராமையா
117. புதுக்கோட்டை - டி.கருப்பையா
118. திருமயம் - பி.கே.வைரமுத்து
119. ஆலங்குடி - கு.பா.கிருஷ்ணன்
120. காரைக்குடி - சோழன். சித. பழனிசாமி
121. திருப்பத்தூர் - ஆர்.எஸ்.ராஜ. கண்ணப்பன்
122. சிவகங்கை - கே.ஆர்.முருகானந்தம்
123. மானாமதுரை(தனி) - ம.குணசேகரன்
124. சோழவந்தான்(தனி) - எம்.வி.கருப்பையா
125. மதுரை தெற்கு - செல்லூர் கே. ராஜூ
126. மதுரை மத்தி - வி.வி.ராஜன் செல்லப்பா
127. மதுரை மேற்கு - கே.சாலைமுத்து
128. திருப்பரங்குன்றம் - ஏ.கே.போஸ்
129. திருமங்கலம் - மா. முத்துராமலிங்கம்
130. உசிலம்பட்டி - பா.நீதிபதி
 

131. ஆண்டிபட்டி - தங்கதமிழ்செல்வன்
132. பெரியகுளம்(தனி) - கே. இளமுருகன்
133. போடி நாயக்கனூர் - ஓ.பன்னீர்செல்வம்
134. கம்பம் - கே.சந்தனகுமார்
135. ராஜபாளையம் - கே.கோபால்சாமி
136. ஸ்ரீவில்லிபுத்தூர்(தனி) - கே.சீனிவாசன்
137. சாத்தூர் - ஆர்.பி.உதயகுமார்
138. சிவகாசி - கே.டி.ராஜேந்திர பாலாஜி
139. விருதுநகர் - எம்.எஸ்.வி.பி.ரவி
140. அருப்புக்கோட்டை - வைகைசெல்வன்
141. பரமகுடி(தனி) - எஸ்.சுந்தர்ராஜ்
142. முதுகுளத்தூர் - மு.முருகன்
143. விளாத்திகுளம் -ஜி.வி.மணிகண்டன்
144. தூத்துக்குடி - ஜெனிபர் சந்திரன்
145. திருச்செந்தூர் - பி.ஆர்.மனோகரன்
146. ஸ்ரீவைகுண்டம் - எஸ்.பி.சண்முகநாதன்
147. ஒட்டபிடாரம்(தனி) - என்.சின்னதுரை
148. கோவில்பட்டி - கடம்பூர் சே.ராஜூ
149. சங்கரன்கோவில்(தனி) - சோ.கருப்புசாமி
150. வாசுதேவநல்லூர்(தனி) - டாக்டர் எஸ். துரையப்பா
151. கடையநல்லூர் - பி.செந்தூர்பாண்டியன்
152. தென்காசி - கே.அண்ணாமலை
153. ஆலங்குளம் - பி.ஜி.ராஜேந்திரன்
154. திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்
155. அம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா
156. நாங்குனேரி - ஆர்.எஸ். முருகன்
157. ராதாபுரம் - எல்.சசிகலா புஷ்பா
158. கன்னியாகுமரி - கே.டி.பச்சைமால்
159. நாகர்கோவில் - நாஞ்சில் ஏ. முருகேசன்
160. குளச்சல் - பி.லாரன்ஸ்