Wednesday, November 24, 2010

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி

நீரா ராடியா-ராசா, கனிமொழி உரையாடல்களுக்கு என்ன பதில்? - கருணாநிதிக்கு ஜெயலலிதா கேள்வி
சென்னை, நவ.24,2010
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், நீரா ராடியா - ராசா, நீரா ராடியா - கனிமொழி உரையாடல்கள் குறித்து முதல்வர் கருணாநிதி இதுநாள் வரை வாய் திறக்காதது ஏன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
பகுத்தறிவு...
தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் வளர்ந்தவர் என்று தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொண்டு, தஞ்சை பெரிய கோயிலின் பிரதான வாயில் வழியாக கோயிலுக்குள் சென்றால் தனக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்பதால் பின்பக்க வாசல் வழியாக கோயிலுக்குள் சென்றவர், கருணாநிதி.
அப்போது பட்டு வேட்டி, பட்டு சட்டை சகிதமாக கோயிலுக்குள் சென்று ஆயிரம் நடனக் கலைஞர்கள் நடனமாடியதை கண்டு களித்த கருணாநிதி; ஜோதிடரின் சொல்லுக்கு இணங்க மஞ்சள் துண்டை அணிந்து கொள்ளும் கருணாநிதி; பெரியார் கொள்கை குறித்து அறிக்கை வெளியிட்டு இருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் அமைந்துள்ளது.  
இது மட்டுமல்லாமல், கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டவுடன், குடும்பத்துடன் திருக்குவளை கிராமத்திற்குச் சென்று குடும்ப குலதெய்வமான அங்காள பரமேஸ்வரி கோயிலில் சாமி தரிசனம் செய்தது; கோயில் குடமுழுக்கு விழாக்களில் தன் மனைவி, துணைவி, மகள்கள், குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்வது; வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் மற்றும் ஜோதிடர்கள் பின்னால் தன் குடும்ப உறுப்பினர்கள் சுற்றித் திரிவது - இவற்றை எல்லாம் மறந்து, பகுத்தறிவு குறித்து கருணாநிதி அறிக்கை விடுத்திருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. 
"பணத்தால் இயங்க வேண்டிய நிலையிலுள்ள அரசியல் இயக்கம் பணக்காரர்களின் இயக்கமாகி விடும். அங்கே தியாகமும், தொண்டுணர்வும் பின்னுக்குத் தள்ளப்படும். சுழல் சொல்லாளர்களும், தன்னலங்களும் தலைமையேற்று விடுவர்" என்று சொன்னார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.  பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட தி.மு.க-வை பணக்கார இயக்கமாக மட்டுமல்லாமல், குடும்ப இயக்கமாகவே மாற்றிய பெருமை கருணாநிதியையே சாரும்.
"அரசியல் இயக்கம் பொதுப்பணி உணர்வோடு கூடிய கூட்டமாக அமையாவிடில், பதவியைப் பெறும் வாயிலென்றும், உடமையாளன் தன் உடமையைக் காக்கும் பீடம் என்றும் கருதும் மனப்போக்கு உருவாகிவிடும்" என்றார் பேரறிஞர் அண்ணா.  இன்று தன் குடும்ப உறுப்பினர்களுக்கு பதவியைப் பெறுவதற்கும், சொத்துகளை குவிப்பதற்கும் தானே தி.மு.க. என்கிற கட்சியை கருணாநிதி பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்?  கருணாநிதியிடம் பொதுப்பணி எங்கு இருக்கிறது? அவரிடம் இருப்பதெல்லாம் குடும்பப் பணி ஒன்று தான். 
"ஜனநாயகம் பின்னோக்கிச் செல்லும் நிலை கூடாது. சிறந்த ஜனநாயக சூழ்நிலை வளர அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்" என்றார் பேரறிஞர் அண்ணா. ஆனால், ஜனநாயகத்தை வேரோடு அழிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. இப்படிப்பட்ட கருணாநிதிக்கு, தந்தை பெரியார் கொள்கை மற்றும் பேரறிஞர் அண்ணா கோட்பாடுகளைப் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது? திமுக-வை குடும்ப நிறுவனம் ஆக்கிவிட்டார் கருணாநிதி என்று உலகப் புகழ்பெற்ற "THE NEW YORK TIMES" அமெரிக்க நாளிதழ் கூட விமர்சனம் செய்திருக்கிறது.
அறிக்கைகள்...
கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், "யாரோ எழுதுகிறார்கள் - யாரோ தட்டச்சு செய்து அதனை "பேக்ஸ்" மூலம் அனுப்புகிறார்கள்.  சில நாட்கள் அதைப் படித்து அம்மையார் கையெழுத்து போடுகிறார்.  சில நாட்களில் அவருக்கு அதற்கே நேரம் கிடைப்பதில்லை.  எனவே அதையும் தட்டச்சு செய்தே அனுப்பி விடுகிறார்கள்" என்று கூறியிருக்கிறார். 
இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. கருணாநிதி தன்னைப் போலவே அனைவரையும் நினைத்துக் கொண்டிருக்கிறார் போலும்! எனது அறிக்கைகள் அனைத்தும் என்னால் எழுதப்பட்டு, தட்டச்சு செய்யப்பட்டு, பின்னர் மீண்டும் சரிபார்க்கப்பட்டு, என்னுடைய கையெழுத்துடன் தான் தினமும் வெளியிடப்படுகின்றன என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.  நேரடியாகவும், "பேக்ஸ்" மூலமும் பத்திரிகைகளுக்கு கொடுக்கப்படும் அறிக்கைகளில் என்னுடைய கையெழுத்து நிச்சயம் இருக்கும்.
பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் வசதிக்காக மின் அஞ்சல் மூலம் அனுப்பப்படும் போது என்னுடைய கையெழுத்து அதில் இருக்காது. அதற்கு அவசியமும் இல்லை. வங்கிகள், பொதுத் துறை மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் வாடிக்கையாளர் கணக்குகள் குறித்த விவரங்கள் அடங்கிய பட்டியல் கொடுக்கப்படும் போது இந்த முறை தான் பின்பற்றப்படுகிறது.
தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் இந்திய அரசின் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை தன்னுடைய அமைச்சர் மூலம் சுருட்டிக் கொள்ளும் கருணாநிதிக்கு, தகவல் தொழில்நுட்பத்தின் பயன்களை அறிந்து கொள்ள நேரமில்லை போலும்! அந்த அளவுக்கு வருமானம் வந்து கொண்டிருக்கிறது!
"உதட்டில் வெல்லம், உள்ளத்தில் கள்ளம்" என்ற அடிப்படையில் செயல்படக் கூடியவர் கருணாநிதி என்று நான் தெரிவித்த கருத்திற்கு நீண்ட விளக்கம் அளித்து இருக்கிறார் கருணாநிதி.
இந்திரா...
முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தி மதுரை வந்த போது அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திவிட்டு, அந்தத் தாக்குதலில் அன்னை இந்திரா காந்தி அவர்களுக்கு ஏற்பட்ட ரத்தக் காயத்தை, பெண்ணினத்தையே இழிவுபடுத்தும் வகையில் கொச்சைபடுத்திவிட்டு, பின்னர் "நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சித் தருக" என்று கூறியதை மக்கள் இன்னமும் மறக்கவில்லை என்பதையும்; விதவை ஓய்வூதியத் திட்டத்திற்கு அன்னை இந்திரா காந்தி விண்ணப்பித்தால் அதை பரிசீலிக்கத் தயார் என்று தி.மு.க. அறிவித்ததை யாரும் மறக்கவில்லை என்பதையும்; பெருந்தலைவர் காமராஜ், தியாகி கக்கன்ஜி, மூதறிஞர் ராஜாஜி என அனைத்துத் தலைவர்களையும் கருணாநிதி வசைபாடியதும்; ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தின் நிழல் கருணாநிதியின் மீது படிந்திருக்கிறது என்று ஜெயின் கமிஷன் இடைக்கால அறிக்கை சுட்டிக்காட்டியதும் மத்தியிலே உள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்பதையும் கருணாநிதிக்கு இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 
சிபிஐ அதிகாரி மாற்றம்...
அடுத்தபடியாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரி மாற்றப்பட்டதற்கு தான் காரணமல்ல என்றும், இதற்கு ஆதாரம் இருக்கிறதா என்றும் கேட்டிருக்கிறார் கருணாநிதி. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கிய குற்றவாளி முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா. இதற்கு பின்னணியில் கருணாநிதியும், அவரது குடும்பமும் இருக்கிறது. 
இந்தச் சூழ்நிலையில் இந்த வழக்கை நியாயமாகவும், நேர்மையாகவும் விசாரித்து வந்த சி.பி.ஐ. அதிகாரி மாற்றப்படுகிறார் என்றால், இந்த மாறுதலில் கருணாநிதியின் தலையீடோ அல்லது கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் திமுக-வின் தலையீடோ நிச்சயம்  இருந்திருக்க வேண்டும்.  இல்லையென்றால், இந்த மாற்றம் ஏற்பட்டு இருக்காது. சூழ்நிலைச் சான்று (Circumstantial evidence) தான் இதற்கு ஆதாரம் என்பதை கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
மத்திய கண்காணிப்பு ஆடையர் நியமனம் குறித்து அண்மையில் உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்து உள்ளது.  ஏற்கெனவே ஊழல் வழக்கில் சிக்கியுள்ள, ஸ்பெக்ட்ரம் ஊழலை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மத்திய தொலைதொடர்புத் துறை செயலாளர் எப்படி மத்திய கண்காணிப்பு ஆடையராக நியமனம் செய்யப்பட்டார் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், இதிலும் கருணாநிதியின் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் தற்போது பரவலாக ஏற்பட்டுள்ளது. இதற்கும் சூழ்நிலைச் சான்று தான் ஆதாரம் என்பதை கருணாநிதிக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.  
நீரா ராடியா...
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து முதலில் பேட்டி அளித்த கருணாநிதி, முந்தைய அமைச்சர்கள் பின்பற்றியதைத் தான் ராசா பின்பற்றினார் என்றும், அதில் தவறு ஏதும் நடைபெறவில்லை என்றும் கூறினார்.  இதனை அடுத்து, 2ஜி ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் குறித்து அமைச்சர்கள் அடங்கிய குழுவுக்கு (Empowered Group of Ministers) மாற்ற வேண்டாம் என்று வலியுறுத்தி பாரதப் பிரதமருக்கு 2006-ஆம் ஆண்டே கடிதம் எழுதியுள்ளார் கருணாநிதியின் பேரன் தயாநிதி மாறன். 
இதிலிருந்து 2ஜி ஸ்பெக்ட்ரம் விலையை நிர்ணயிப்பதில் தி.மு.க. குறியாக இருந்தது என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டு உள்ளது.  இது போன்று ஆதாரங்கள் வந்து கொண்டுள்ள நிலையில், ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டு கருணாநிதி அறிக்கை வெளியிடுவது அவரது அறியாமையைத் தான் காட்டுகிறது.

நீரா ராடியா - ராசா, நீரா ராடியா - கனிமொழி உரையாடல்கள் தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து கருணாநிதி இதுநாள் வரை வாய் திறக்கவில்லை.
இதே போன்று, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி காங்கிரஸ் கட்சித் தலைவரை அவரது இல்லத்தில் ரகசியமாக சந்தித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.  இதன் மர்மம் என்ன என்பது குறித்து கருணாநிதி இதுவரை விளக்கவில்லை. 
எது எப்படியோ, உலக மகா ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதியின் குட்டு வெளிப்படும் நாள் வேகமாக நெருங்கிக் கொண்டு இருக்கிறது," என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
 

Friday, November 19, 2010

ஸ்பெக்ட்ரம் ஊழல்,கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவிஅறிக்கை

அனைத்து சட்டவிரோதச் செயல்களின் மூலம் பல லட்சம் கோடி சொத்துக்களை குவித்து வைத்து
தமிழ்நாட்டை நாசமாக்கிக் கொண்டிருக்கிற கருணாநிதியையும் அவர் குடும்பத்தாரையும் மக்கள் மறக்கவில்லை
கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா எச்சரிக்கை


சென்னை, நவ. 19 -

ஸ்பெக்ட்ரம் ஊழல், மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, கள்ள லாட்டரி சீட்டு விற்பனை, ரேஷன் பொருட்கள் கடத்தல், பொதுச் சொத்துகள் அபகரிப்பு என அனைத்து சட்ட விரோதச் செயல்களின் மூலம் பல லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் சொத்துக்களை குவித்து, தமிழ்நாட்டை நாசமாக்கிக் கொண்டிருக்கின்ற கருணாநிதியையும், கருணாநிதி குடும்பத்தாரையும் மக்கள் மறக்கவில்லை என்பதைத் தெரிவித்து, குடும்ப ஆட்சி அழியும் நேரம் நெருங்கிவிட்டது என எச்சரிக்கிறேன் என கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

இதுகுறித்து கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அறிக்கை வருமாறு:-

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நான் வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் கருணாநிதியால் வெளியிடப்பட்ட அறிக்கை “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” என்ற பழமொழிக்கேற்ப அமைந்துள்ளது. வளம் கொழிக்கும் இலாகா பறிபோய் விட்டதே என்ற ஆத்திரத்தில், நிதானம் இழந்து, ஒரு கோமாளித்தனமான அறிக்கையை கருணாநிதி வெளியிட்டு இருக்கிறார். விரக்தியின் விளிம்பிற்கு தான் சென்றுவிட்டதை தன்னுடைய அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தி இருக்கிறார் கருணாநிதி.

இழப்பு நிச்சயம் ஏற்பட்டுள்ளது
கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், அனுமானத்தின் அடிப்படையிலே இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று தணிக்கை அறிக்கையிலே குறிப்பிடப்பட்டு இருப்பதாகத் தெரிவித்து, அனுமானத்தில் சொல்லப்படும் கருத்தின் அடிப்படையில் இறுதித் தீர்ப்பை எழுத முற்படுவது முறை தானா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இழப்பின் மதிப்பு தான் அனுமானம் என்பதையும், இழப்பு அனுமானம் அல்ல என்பதையும் கருணாநிதி முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, 1 லட்சத்து 76 ஆயிரத்து 379 கோடி ரூபாய் இழப்பு என்பது, 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கலாம், அல்லது இரண்டு லட்சம் கோடி ரூபாயாகவும் இருக்கலாம். ஆனால் இழப்பே ஏற்படவில்லை என்று சொல்ல முடியாது. இழப்பு நிச்சயம் ஏற்பட்டு இருக்கிறது. உதாரணமாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய் 10,000 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால், 3ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல். எனவே, லட்சக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பது என்பது அனுமானத்தின் அடிப்படையில் அல்ல என்பதை கருணாநிதிக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

கருணாநிதி பேசுவது கண்டனத்துக்குரியது
அடுத்தபடியாக, மாநில அரசின் பல்வேறு துறைகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்கும் தணிக்கை அதிகாரியின் அறிக்கைகள் குறித்து நீட்டி முழக்கி இருக்கிறார் கருணாநிதி. இது மட்டுமல்லாமல், எனது ஆட்சிக் காலத்தில் தணிக்கை அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளுக்காக நான் அப்போது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேனா? என்று கருணாநிதி கேள்வி எழுப்பி இருக்கிறார். இது கருணாநிதியின் அறியாமையைத் தான் காட்டுகிறது. மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு மீதான குறைபாடுகளை தணிக்கைத் துறை சுட்டிக்காட்டுவது என்பது வழக்கமான ஒன்று. அந்த குறைபாடுகள் எல்லாம் எல்லோரது ஆட்சிக் காலங்களிலும் நடைபெற்று இருக்கின்றன. இவைகள் எல்லாம் மாநில மற்றும் மத்திய அரசுகளின் மீது கூறப்படும் பொதுவான குறைபாடு. இதற்காக எந்த முதலமைச்சரும் ராஜினாமா செய்ய மாட்டார்கள். கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்திலும் பல்வேறு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அண்மையில் கூட, DLF நிறுவனத்திற்கு 26 ஏக்கர் நிலம் 99 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டதில் மாநில அரசுக்கு 148 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று தணிக்கை அதிகாரி சுட்டிக்காட்டி இருக்கிறார். இதற்காக கருணாநிதி என்ன ராஜினாமா செய்தாரா? திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மைனாரிட்டி தி.மு.க. அரசு வீணடித்துக் கொண்டிருக்கிறது என்று கூறிய தணிக்கை அதிகாரி சங்கரநாராயணனை பொதுக் கணக்குக் குழு முன்பு ஆஜராகி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிர்பந்தித்ததை எல்லாம் மறந்துவிட்டு வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற வகையில் கருணாநிதி பேசுவது கண்டிக்கத் தக்கது.

திசைதிருப்பும் வகையில் கருணாநிதி அறிக்கை விடுகிறார்
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலைப் பொறுத்த வரையில், முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசாவை கடுமையாக சாடியிருக்கிறது இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை. 2001-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற பிரதமரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் என்ன? Empowered Group of Ministers என்ற குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற மத்திய சட்ட அமைச்சரின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டது. வேண்டியவர்களுக்கு சலுகை வழங்குவதற்காக கடைசி தேதி ஏன் முன் தேதியிடப்பட்டது? தகுதியே இல்லாத நிறுவனங்களுக்கு 85 உரிமங்கள் வழங்கப்பட்டது எப்படி? கடுமையான எதிர்ப்பையும் மீறி ‘முதலில் வருபவருக்கு முதலில்’ என்ற கொள்கையை கடைபிடித்ததன் நோக்கம் என்ன? அந்தக் கொள்கையும் சரியாக கடைபிடிக்கப்படாததன் காரணம் என்ன? என தணிக்கை அறிக்கையில் பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ராசாவின் மீது தனிப்பட்ட முறையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளே தவிர, மத்திய அரசின் மீது பொதுவாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அல்ல. அதனால் தான் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புகின்றன. இவற்றை எல்லாம் சரியாக படித்து புரிந்து கொள்ளாமல், மக்களை திசை திருப்பும் வகையில் கருணாநிதி அறிக்கை வெளியிட்டு இருப்பது அவரது அறியாமையைத் தான் காட்டுகிறது.

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறார்

அடுத்தபடியாக, “வெறும் கருத்தியலான இழப்பை பெரிதுப்படுத்திக் காட்டுவதும், இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுவிட்டது என்ற தோற்றத்தை உருவாக்குவதும் சற்றும் முறையல்ல” என்று கருணாநிதி கூறியிருப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி செய்வது போல் உள்ளது. தமிழக அரசின் ஆண்டு வருவாய் கிட்டத்தட்ட 60,000 கோடி ரூபாய். மூன்று ஆண்டு தமிழக அரசின் வருவாயை மொத்தமாக முழுங்கியது கருணாநிதிக்கு சாதாரண விஷயமாகிவிட்டது. உலகப் பணக்காரர்கள் வரிசையில் முன்னணியில் உள்ள குடும்பத்தின் தலைவரான கருணாநிதிக்கு, 1,76,379 கோடி ரூபாய் என்பது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அரசுக்கு வரவேண்டிய வருவாய் எங்கோ திருப்பி விடப்பட்டு இருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவுக்கு வக்காலத்து வாங்கும் வகையில் கருணாநிதி பேசுவதைப் பார்த்தால், தமிழக மக்கள் உட்பட இந்திய மக்களின் நலனுக்காக செலவிடப்பட வேண்டிய பணத்தை ‘தன்’ மக்களுக்காக கருணாநிதி பயன்படுத்திக் கொண்டு விட்டாரோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழல், மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, கள்ள லாட்டரி சீட்டு விற்பனை, ரேஷன் பொருட்கள் கடத்தல், பொதுச் சொத்துகள் அபகரிப்பு என அனைத்து சட்ட விரோதச் செயல்களின் மூலம் பல லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் சொத்துக்களை குவித்து, தமிழ்நாட்டை நாசமாக்கிக் கொண்டிருக்கின்ற கருணாநிதியையும், கருணாநிதி குடும்பத்தாரையும் மக்கள் மறக்கவில்லை என்பதைத் தெரிவித்து, குடும்ப ஆட்சி அழியும் நேரம் நெருங்கிவிட்டது என்பதை கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமது அறிக்கையில் கூறியுள்ளார்கள்.