Saturday, January 22, 2011

முக்கிய பிரச்னைகளை தீர்க்க ஏன் கோரிக்கை வைக்கவில்லை: ஜெ.,


சென்னை : ""முல்லை பெரியாறு, காவிரி, இலங்கைத் தமிழர்கள், தமிழக மீனவர்கள், விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு போன்ற முக்கிய பிரச்னைகளைத் தீர்க்க, மத்திய அரசிடம் முதல்வர் கருணாநிதி ஏன் கோரிக்கை வைக்கவில்லை,'' என அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியுடன் தனக்குள்ள உறவு குறித்து ஒரு விழாவில் முதல்வர் கருணாநிதி, "எப்போதெல்லாம் நான் காங்கிரஸ் கட்சிக்கு வேண்டுகோள் வைக்கிறேனோ, அப்போதெல்லாம் அதை ஏற்றுக் கொள்ள முதலில் தயக்கம் காட்டும் காங்கிரஸ் பின் அதை ஏற்றுக்கொண்டு விடும்' என கூறியுள்ளார்.வருமான வரித்துறையினரால் பதிவு செய்யப்பட்ட கனிமொழி மற்றும் பூங்கோதையுடனான நிரா ராடியாவின் உரையாடல்கள், கருணாநிதியின் கூற்றுக்கு பல முறை வலுவூட்டும் விதமாக அமைந்துள்ளன.

ஆண்டிமுத்து ராஜாவுக்கு தொலைத்தொடர்புத் துறை தர வேண்டுமென கருணாநிதி வலியுறுத்தினார். கட்டமைப்பு தொடர்பான துறை கேட்காமல் இருக்கும் பட்சத்தில் டி.ஆர்.பாலுவை மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள காங்கிரஸ் சம்மதித்தது. ஆனால், கருணாநிதியோ வேறு திட்டங்களை வைத்திருந்தார்.பாலுவை மீண்டும் மத்திய அமைச்சராக்கும் எண்ணமே கருணாநிதிக்கு இல்லை. எனவே, மத்திய அரசு நிராகரிக்கும் என்று தெரிந்தே, வேண்டுமென்றே ரயில்வே துறையை பாலுவுக்கு தர வேண்டுமென கருணாநிதி கேட்டார். அவரது திட்டம் வெற்றி பெற்றது. பாலுவின் பெயர், மத்திய அமைச்சரவை பதவிக்கு பரிசீலிக்கப்படவில்லை.நிரா ராடியாவின் உரையாடல் வெளிவரும் வரை, உண்மையை நிரா ராடியா போட்டு உடைக்கும் வரை, மிக முக்கியமான துறையை கருணாநிதி தனக்கு பரிந்துரை செய்தார் என்றும், அதை மன்மோகன் சிங் நிராகரித்துவிட்டார் என்றும் தான் பாலு நினைத்திருந்தார்.

காவிரி, பாலாறு பொன்னையாறு ஆகிய நதி நீர்ப் பிரச்னைகளில் தமிழகத்திற்குள்ள நியாயமான பங்கு ஏன் கிடைக்கவில்லை. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டுமென சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தமிழக அரசால் ஏன் செயல்படுத்த முடியவில்லை.அப்பாவி தமிழக மீனவர்களை கொன்று குவிக்கும் இலங்கை கடற்படையை தடுத்து நிறுத்த, ஏன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை, குறிப்பாக காய்கறிகள், உணவுப் பொருட்கள் மற்றும் பெட்ரோல் ஆகியவற்றின் விலைகளைக் குறைக்க ஏன் எதையும் செய்யவில்லை.

இலங்கை போரின் இறுதிக் கட்டத்தில் அப்பாவி இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதை தடுத்து நிறுத்த, மத்திய அரசு ஏன் தனது சுண்டு விரலைக் கூட அசைக்கவில்லை. இதற்கு காரணம், இந்தக் கோரிக்கைகளை எல்லாம் கருணாநிதி மத்திய அரசிடம் முன் வைக்கவில்லை என்பது இப்போது நமக்குத் தெரிகிறது.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.


அம்மாவின் ஆதாரங்கள் அற்புதம்.

மக்களை ஏமாற்றி கிட்டத்தட்ட இரண்டு லட்சம் கோடிகளை சுருட்டியவருக்கா தெரியாது..தனது கட்சி டி ஆர் பாலுவை ஏமாற்ற? சம்பாதிப்பை அள்ளிவழங்கும் துறையை கண்டுகொண்டவர் அதை கேட்டு தரவில்லை என்றதுமே வந்ததே கோபம், உடனே பிரதமரின் மந்திரிசபை பதவி ஏற்பு விழாவையே புறக்கணித்து சென்னை திரும்பிய இந்த பணத்தாசை மனிதருக்கு நாட்டின் நலனா முக்கியமாய் படும்? தமிழகம் விரைவிலே பாலைவனமாகப்போகும் நாட்களும் தூரமில்லை என்று தெரிந்தும் இந்த நான்கரை ஆண்டுகளில் காவிரி பிரச்சினையில் ஒரு துரும்பை கிள்ளி எறிந்தார் என்று சொல்ல சொல்லுங்கள் ரோஷமுள்ள இவரது அடிமைகளை.! இவரையும் ஆதரிக்கும் ஒரு கேடுகெட்ட கூட்டம் உள்ளதே என்றுதான் வருத்தமே. முல்லை பெரியாறு விஷயத்திலே இவரால் முடிந்தது என்ன? வைகோ அவர்கள் போராடியதை கிண்டலடிக்க மட்டுமே தெரிந்தது.

பாலாறு விஷயம் என்ன ஆனது? அதிலும் கோட்டை விட்டார் இந்த மனுஷர். கேட்டால் நான் ஐந்து முறை முதல்வராய் இருந்தவன் என்பார். இந்த ஐந்து முறையில் ஒரே ஒரு முறை நான் இந்த நீராதார பிரச்சினையில் சாதித்தது இது என்று விரல் விட்டு சொல்ல சொல்லுங்கள்? நீரா ராடியா உடனான பேச்சு மட்டுமே இவருக்கு பலனை தந்தது. அல்லது அந்த பேச்சால் குறைந்த பட்சம் மந்திரி பதவி விலை பேசப்பட்டு சுமார் அறுநூறு கோடிகள் சொந்த பேரனிடமே வசூல் செய்யப்பட்டது. இப்போது சொல்லுங்களேன் அம்மாவின் கேள்விக்கு பதிலை..!! கேட்டால் நீ..அப்படி நீ அரசு ஊழியர்களை ஆட்டிப்படைத்தாய்.. அவர்களை சாட்டை கொண்டு வேலை வாங்கினாய், ஊழல் செய்ய விடாத கொடுமைக்காரி, என்று இன்னும் இரட்டை அர்த்தங்களோடு காது கூசும் அளவு மட்டும் பேசத்தெரியும். மஞ்ச பையோடு கள்ள ரயில் ஏறி வந்தவருக்கு எப்படி இப்படி தெற்காசிய பெரும் பணக்கார புள்ளி என்று பெயர் எடுக்க முடிந்தது? அன்று மஞ்ச பை..இன்று

 மஞ்ச துண்டை போர்த்தியும், மஞ்ச மஞ்சளாய் பேசவும், ஏமாற்றும் வித்தை மட்டும் நன்றாய் தெரிகின்றது. உருப்படியான காரியத்தை செய்யாமல் தனது குடும்பத்தை மட்டுமே வளர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றதுதான் மிச்சம். விலை நிலங்களை எல்லாம் பேரம் பேசி பினாமிகள் பெயரில் பதிவு செய்தும், சினிமா துறையில் தன்னை முதன்மையாய் ஆதிக்கம் செய்ததும், மீறுவோரை பணத்தால் அடித்து விரட்டுவதும், பல்வேறு நாடுகளில் ஏகப்பட்ட முதலீடுகளை செய்ததும், தொலைக்காட்சிகளை உடனுக்குடன் நிறுவி அதன் மூலம் பொய் பொய்யான செய்திகளை பரப்பவும், நீதிகள் விலைக்கு வாங்கப்படுவதும், நீதிமான்கள் மிரட்டப்படுவதும், பத்திரிகைகள் அடித்து நொறுக்கபபடுவதும்,

ஒரு இனமே அருகில் உள்ள நாட்டிலே அழிக்கப்படுவதை கண்டுகொள்ளாமல் மானாட மயிலாட என்று அந்த காலத்து ராசாவை போல சுகித்து பார்த்ததும், இடைதேர்தலில் பணத்தால் வாக்குகளை விலை பேசும் அநியாயத்தை அறிமுகப்படுத்தியதும், அதற்கு திருமங்கலம் பார்முலா என்று பெயர் வைத்ததும், ஒரு சில மணித்துளிகள் உண்ணாவிரதத்திற்கு ஏகப்பட்ட ஆர்ப்பாட்டம் செய்த கூத்தும், கொழுக்கு, மொழுக்கு நடிகைகளை படத்திலே நடிக்க சொல்லி அறிவுறுத்துவதிலும், குடும்ப சண்டைகளை தீர்த்து வைக்க முடியாமல் கோபித்துகொண்டு நடுங்கும் குளிரில் ஏலகிரி சென்று பதுங்குவதும், நித்தமும் பட்டமளிப்பு விழா செல்வதும், அதற்காக பிரதமரின் வருகையையே உதாசீனப்படுத்தியதும், அடேங்கப்பா  இந்த மஞ்சளுக்கு ஒன்றே ஒன்று உண்டு என்றால் அது வாய் நீளம் மட்டுமே..அதை விட்டால் பணம் பண்ணும் வித்தை தெரியும், அதையும் விட்டால்..? அழத்தான் தெரியும்..சாதி பெயரை சொல்லி ஊழலில் இருந்து தப்பிப்பதற்கு..

ஈழத்தில் நடந்ததை மறந்து விடாதீர்கள்.



சென்னை, தி.நகர், செ.தெ.நாயகம் பள்ளியில் கடந்த 9-ம்தேதி நடந்த இந்த புத்தக வெளியீட்டுக் கூட்டத்தில், ஒட்டுமொத்தக் கவனத்தையும் ஈர்த்தவர்  நிமல்காஃபெர்​னாண்டோ. இலங்கையில் இருந்து வந்திருந்த இவர், பிறப்பால் சிங்களவர். பாகுபாடுகள் மற்றும் இன வெறிக்கு எதிரான சர்வதேச இயக்கத்தின்தலைவரான நிமல்கா பேசப் பேச, 'ஒரு சிங்களப் பெண்ணுக்கு இருக்கும் அக்கறை இங்கு உள்ள தமிழர்களுக்கு இல்லையே?' என்றகவலை எல்லோர் முகத்திலும் முளைத்தது.

இலங்கை மனித உரிமைப் போராளி நிமல்காவின் ஆங்கிலப் பேச்சில் அழுத்தமான அரசியல் பொறி தெறித்தது. "நான் தமிழில் பேச முடியாமல் இருப்பதற்கு முதலில் வருந்துகிறேன். இலங்கைக் குடிமகளான நான், எங்கள் நாட்டில் பேசப்படும் தமிழைப் பேசத் தெரியாமல் இருப்பதே, அங்கு உள்ள அரசியல் முரண்பாட்டைக் காட்டும். பெரும்பான்மை இனத்தின் ஆதிக்கம் எங்கள் தீவில் நிலவுகிறது. அநீதியின் வரலாற்றைப் பகுப்பாய்​வதற்காக, நான் வரவில்லை. அந்த வரலாறு, தமிழ் மக்கள் படுகொலையில் முடிந்ததை நீங்கள் அறிவீர்கள்.

போரினால் ஏற்பட்ட பாதிப்புகளில்,பெண்​களுக்கு ஏற்பட்டதைத்தான் மோசமான கதியாகக் கருதுகிறேன். எந்த இனத்தைச் சேர்ந்தவளாகவும் நான் இங்கு வரவில்லை. இலங்கைத் தீவில் இருந்து ஒரு பெண்ணாகவே நான் இங்கு நின்று பேசுகிறேன். அண்மையில் மான்குளம், கிளிநொச்சி பகுதிகளுக்குச் சென்று வந்தேன். அடுத்த கட்டம் என்ன? அடுத்த நேர உணவுக்கு வழி என்ன? யாரிடமும் போய்க் கேட்க வாய்ப்பு இல்லாமல்... சிதிலமடைந்த வீடுகளைக் கட்டி எழுப்ப முடியாமல் இருக்கிறார்கள். அநேகமாக எல்லாப் பெண்களும் என்னிடம், 'எங்கே என் கணவர்? எங்கே என் பிள்ளைகள்?' என்றே கேட்டார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை..." என்றவர்,

"அங்கே, 'பிள்ளைகளைத் தனியாக வீட்டில் விட்டுப் போக முடியுமா? அதிலும் முடமாக்கப்பட்ட பெண் பிள்ளை​களைத் தனியாகவிட்டு நான் வேலைக்குப் போக முடியுமா? ஆனால், குறைந்தபட்சம் கஞ்சி காய்ச்சுவதற்கான ஊதியம் பெறுவதற்காவது நான் போக வேண்டுமே... எப்படி?' என்று கதறுகிறார்கள் அந்தப் பெண்கள்.

மறுகுடியமர்த்தப் பணிகளுக்காகப் பல நாடுகள் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்துள்ளன. ஆனால், என்ன நடந் தது? சில வீடுகள் மட்டுமே கட்டப்பட்டு உள்ளன. ஒவ்வொரு வீட்டைச் சுற்றிலும் ராணுவ நிலைகளை வலுவாக அமைத்து இருக்கிறார்கள். மக்கள் சுதந்திரமாகப் பேசிக்கொள்ளக்கூட முடியவில்லை. நான் என்னுடைய மக்களுடன் பேசினால், மூன்றாவது நபரால் கண்காணிக்கப்படுகிறேன். தமிழ் மக்கள் மட்டும் அல்ல, சிங்கள மக்களும் சுதந்திரமாகப் பேசிக்கொள்ள முடியவில்லை.. இங்கே கூட்டம் போட்டுப் பேசுவது​போல இலங்கையின் வடக்கில், கிழக்கில் யாரும் பேசிவிட முடியாது. அரசியல்வாதிகள் பேசினால், கேள்விக்கு உள்ளாக்கப்படுவார்கள். அரசுக்கு எதிராகப்பேசியதாகக் குற்றம் சாட்டப்படுவார்கள், பின்னர் காணாமல் போவார்கள்.

போர், தமிழ் மக்களின் சுயமரியாதை,, தன்மானத்தின் நாடிநரம்புகளையும் சேர்த்தே நசுக்கி இருக்கிறது. இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் பிச்சைக் காரர்களாக இதுவரை இருந் தது இல்லை. போரால் வாழ்வு இழந்த​வர்கள் எல்லோரும், மீனவர்களாகவும் விவசாயி​களாகவும் உணவு உற்பத்தியில் ஈடுபட்டும் இருந்தவர்கள். அரசனாகவோ அரசியாகவோ வாழா​விட்டாலும், உங்களைவிட என்னைவிட வசதியாக வாழ்ந்தவர்கள்தான் அவர்கள். ஆனால், இன்று  கையேந்தி நிற்கிறார்கள்.

கிழக்கு மாகாணத்தில் நல்ல வளங்கள் இருந்தபோதும்... மக்கள் வேலையின்றி, வறுமையில்தான் வாடுகிறார்கள். இதனால், தமிழ் மக்கள் சொந்த கிராமங்களைவிட்டு வெளியேறுகிறார்கள். உடனடியாக, அந்தப் பகுதிகளில் மற்றவர்களைக் குடியமர்த்தி, அங்கே இனப்பரப்பல் விகிதத்தை மாற்றிவிடுகிறார்கள். இஸ்ரேல் - பாலஸ்​தீனம் போன்றதொரு மிக மோசமான நிலைமை இலங்கையில் உரு​வாகிறது. அதுவும் சீனா போன்ற நாடு களின் உதவியுடன் நடக்​கிறது!

தமிழ் மக்கள், சிங்கள ஊடகங்கள், பொதுஜன நியாயத்துக்கான குரலை இலங்கை அரசு கடுமையாக ஒடுக்கு​கிறது. நடந்ததை மறந்துவிடுமாறு அரசாங்கம் திரும்பத் திரும்பச் சொல்கிறது. போரினால் அழிக்கப்பட்ட எந்த ஒன்றையும் எளிதில் மறந்துவிட முடியாது. நீங்களும் மறந்துவிடாதீர்கள்.
இலங்கையின் அனைத்து மக்களும் இன்றைய நிலையில் இருந்து விடுதலை பெற வேண்டும். இந்தப் போராட்டத்துக்காக, வெளிநாட்டில் இருந்துநாங்கள் ஆதரவைப் பெறப்போவதில்லை. தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லிம்களின் கூட்டு முயற்சியுடன், ஆட்சிக் கட்டிலில் இருந்து மகிந்த ராஜபக்ஷே வெளியேறும் காலம் வரும். அந்த நாளை நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம்!" என்று நிமல்கா முடித்தபோது, அரங்கம் அதிரக் கைதட்டல்கள்.

இன வெறி தலைக்கேறி, பிஞ்சுக் குழந்தைகளின் உயிரைக் குடித்த சிங்களத்தில் பிறந்தாலும், நியாயத்துக் காக நிற்கும் நிமல்கா போன்றவர்கள்தான், நிஜமான 'தகத்தகாயக் கதிரவன்'கள்!
ஜூனியர் விகடன் 16-ஜனவரி-2011