Sunday, February 27, 2011

ராசாத்தியும், கனிமொழியும் உண்மையை வெளிப்படுத்துவார்களா?: ஜெயலலிதா கேள்வி


சென்னை, பிப்.27: யதேச்சையாக ஏற்படும் ஒத்த நிகழ்வுகளுக்கும் ஓர் எல்லை உண்டு; முதல்வர் கருணாநிதியின் மனைவி ராசாத்தியும், மகள் கனிமொழியும் இப்பொழுதாவது உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் புரட்சிதலைவி ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சில மாதங்களுக்கு முன்பு, களங்கத்திற்கு ஆளான நீரா ராடியாவுக்கும் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் மனைவி ராசாத்திக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் குறித்து இந்திய ஊடகங்கள் விரிவாக செய்திகளை வெளியிட்டன.  இந்த உரையாடலின் போது, ராசாத்தியின் மிகுந்த நம்பிக்கைக்குரியவரும், ராசாத்தியின் தணிக்கையாளருமான ரத்னம் மொழிபெயர்ப்பாளர் என்ற வகையில் ராசாத்திக்கு உதவி புரிந்தார்.  இந்த உரையாடலின் சாராம்சம் என்னவென்றால், டாடா குழுமம் உறுதி அளித்த நில விவகாரம் முடிவடையாததால் ராசாத்தி வருத்தமடைந்த நிலையில் இருந்தார் என்பது தான்.  இந்த உரையாடலில், சென்னையின் மையப் பகுதியில் உள்ள மிகப் பெரிய இடத்தை பயன்படுத்தி கொண்டிருக்கின்ற டாடா குழுமத்தின் நிறுவனமான வோல்டாஸ் பெயர் குறிப்பிடப்படுகிறது.

பின்னர், இந்த நிலம் தொடர்பாக ராசாத்தியின் கூட்டாளியான சரவணன் என்பவருக்கும் சண்முகநாதன் என்பவருக்கும் இடையே விற்பனை ஒப்பந்தம் ஏற்பட்டு இருப்பது ஆவணங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டது. இந்த ஆவணத்தின்படி, ரூ. 350 கோடி மதிப்புடைய சென்னையின் பிரதானப் பகுதியான அண்ணா சாலையில் அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த இடத்தின் செயலுரிமை ஆவணத்தைப் பெற்ற சரவணன், சங்கல்பம் இன்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநரான சண்முகநாதன் என்பவருக்கு மிகக் குறைந்த விலைக்கு ரூ. 25 கோடிக்கு விற்று இருக்கிறார். இந்த இடத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வோல்டாஸ் நிறுவனம் இயங்கி வந்ததை வைத்து, இந்த இடத்தைப் பற்றித் தான் ராசாத்தியும், ரத்தினமும், நீரா ராடியாவிடம் பேசினார்கள் என்பது தெரிகிறது.

இந்த ஆவணங்கள் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வந்தவுடன், தனக்கும், அந்த இடத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்ற அளவில் ராசாத்தி ஓர் அறிக்கை வெளியிட்டார். சரவணன் தன்னுடைய ராயல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் “முன்னாள் பணியாளர்” என்றும் ராசாத்தி தெரிவித்தார். சரவணன் தற்போது தனது நிறுவனத்தின் பணியாளர் இல்லை என்றும், தற்போது அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார் என்பதற்காக, தன்னை இந்த விவகாரத்தில் தொடர்புபடுத்தக் கூடாது என்றும் கூறினார்.  சங்கல்பம் இன்டஸ்ட்ரீஸ் சண்முகநாதனைப் பொறுத்தவரையில், அவர் மலேசியாவை சேர்ந்த ஒரு வியாபாரி என்றும், அவருக்கும் தனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லையென்றும் ராசாத்தி தெரிவித்தார்.
அண்மையில் கோத்தகிரியின் விண்ட்ஸர் எஸ்டேட்டை சங்கல்பம் இன்டஸ்ட்ரீஸ் இயக்குநர் சண்முகநாதன் வாங்கியிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 
இந்த எஸ்டேட் “கனிமொழி எஸ்டேட்” என்று உள்ளூர்காரர்களால் பேசப்படுகிறது. 

525.98 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த எஸ்டேட் ஆவண எண் 2057/2006 மூலம்

16.12.2006 அன்று வெறும் ரூ. 2.47 கோடிக்கு வாங்கப்பட்டு இருக்கிறது.  ராசாத்தியின் கூற்றுப்படி, இந்த எஸ்டேட்டை வாங்கிய சண்முகநாதனுக்கும், ராசாத்திக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், சண்முகநாதனால் வாங்கப்பட்ட விண்ட்ஸர் எஸ்டேட்டின் ஆவணத்தில் சென்னை, தி.நகர், 12, சௌத் வெஸ்ட் போக் ரோடு என்ற முகவரியில் வசிக்கும் கே. சேஷாத்ரியின் மகன் எஸ். சீனிவாச ரத்னம் என்பவர் சாட்சிக் கையெழுத்து போட்டு இருக்கிறார்.  அரசியல் தரகர் நீரா ராடியாவுடன் தொலைபேசியில் ராசாத்தி பேசும் போது அவருக்கு உதவி புரிந்த தணிக்கையாளர் ரத்தினத்திற்கும், எஸ். சீனிவாச ரத்தினற்கும் ஒதே முகவரி தான்! அவரே தான் இவர்!

சண்முகநாதனின் வோல்டாஸ் நில விற்பனையில் தொடர்புடையவர் ராசாத்தியின் முன்னாள் பணியாளர் சரவணன்.  சண்முகநாதனின் விண்ட்ஸர் எஸ்டேட் நில விற்பனையில் தொடர்புடையவர் ராசாத்தியின் தற்போதைய ஆடிட்டர் ரத்னம்.  விண்ட்ஸர்  எஸ்டேட்டை உள்ளூர் மக்கள் “கனிமொழி எஸ்டேட்” என்று தான் அழைக்கிறார்கள்.... 
யதேச்சையாக ஏற்படும் ஒத்த நிகழ்வுகளுக்கும் ஓர் எல்லை உண்டு, அல்லவா? 

இப்பொழுதாவது, ராசாத்தியும், கனிமொழியும் உண்மையை வெளிப்படுத்துவார்களா? என அதிமுக பொதுச்செயலர் புரட்சிதலைவி ஜெயலலிதா தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment